மாணவர் கைதை ஏற்கமுடியாதென்கிறார் சமாதான வேடதாரி


“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலளர் ஆகியோரைப் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதை ஒருபோதும் ஏற்கவே முடியாது.”

– இவ்வாறு தெரிவித்தார் தேசிய நல்லிணக்க செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலின்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புடைப்படமும், மாவீரர்களின் புகைப்படங்களும் இருந்தன எனக் குற்றம்சாட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சந்திரிகா ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாணவர்கள் இருவரும் அப்பாவிகள் என்று தமிழ் அரசியல்வாதிகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினரும் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் படங்கள் கடந்த காலங்களில் வைக்கப்பட்டிருந்தன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே, சட்டமா அதிபர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு அவர்களை விடுவிக்க வேண்டும்.

யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் முதுகெலும்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் விளங்குகின்றது. இதனால்தான் விடுதலைப்புலிகளின் காலத்தில் அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனால் எனது ஆட்சிக்காலத்திலும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி இருந்தது.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் அமைதியான முறையில் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில், அப்பாவி மாணவர்களைக் கைதுசெய்து தடுத்துவைப்பது அந்தப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்கும்” – என்றார்.

No comments