துப்பாக்கிச் சூட்டில் ஐதேக உறுப்பினர் படுகாயம்

பெலியத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் கபில அமரகோன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பல்லத்தர, மொதரவான பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டுக்கு இன்று (20) காலை சென்ற அவருடைய உறவினர் ஒருவரே, குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் தங்காலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யார் இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டார்கள் என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments