புளோரிடா செல்கின்றது மன்னார் மாதிரி?


மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க  நாளை (23) புதன்கிழமை காலை கொழும்புக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை 134 ஆவது தடவையாக இடம் பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ  எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்கு அனுப்புவது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் நீதவான் மற்றும் விசாரணைக்குழு அதிகாரிகள் இடையில் இடம்பெற்றது.

இந்நிலையில் நாளை புதன்கிழமை (23) காலை மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்தில் இருந்து கொழும்பு விமான நிலையத்துக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படவுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடாவுக்கு காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை குறித்த அகழ்வு பணிகளின் போது 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 294 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 23 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments