சிறிலங்கா கடற்படை வெறியாட்டம் - இந்திய மீனவர் பலி

நெடுந்தீவுக் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இந்திய மீனவர் ஒருவரின் சடலம் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழ்நாடு மீனவர்களின் சுமார் 500 படகுகளை சிறிலங்கா கடற்படையினர் விரட்டியடித்தனர்.

இதன்போது, இரண்டு பிரிவுகளாக, மூன்று படகுகளுடன் 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா கடற்படையினால் அறிவிக்கப்பட்டது.

நாச்சிக்குடா கடலில் கைது செய்யப்பட்ட 11 மீனவர்கள் நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

ஏனைய 9 மீனவர்களும் காரைநகர் கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 8 மீனவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அவர்களில் சிலர்  காயமடைந்திருந்ததால், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்க மறுத்தனர். ஊர்காவற்றுறை காவல்துறையினரும் பொறுப்பேற்க மறுத்ததால், காங்கேசன்துறை காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காயங்களுடன் இருந்த தமிழ்நாடு மீனவர்களை பொறுப்பேற்க காங்கேசன்துறை காவல்துறையினரும் மறுத்த நிலையில், உயர்மட்டப் பேச்சுக்களை அடுத்து, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சிறிலங்கா கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட 8 மீனவர்கள் அடிகாயங்களுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் பார்வையிட்டனர்.

அதேவேளை, தாம் துரத்திய போது, கடலில் குதித்த மீனவரை நெடுந்தீவு கடலில் சடலமாக மீட்டதாக சிறிலங்கா கடற்படையினரால் சடலம் ஒன்று நேற்றிரவு யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய விசாரணைகளின் போது தாக்கப்பட்டே குறித்த மீனவர் உயிரிழந்தார் என்று மீனவர்கள் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பையா முனுசாமி (வயது -55 என்ற மீனவரே உயிரிழந்தவராவார்.

No comments