சொகுசு வாகனம் கிடைக்காத ஆறு உறுப்பினர்கள்



வட மாகாண சபையின் ஆயுட் காலம் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வடமாகாண சபையின் 6 உறுப்பினர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர்கள் 38 பேருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதி பத்திரத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

37 உறுப்பினர்களுக்கு குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதும், அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த பா.சத்தியலிங்கம் குறித்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள தகுதி அற்ற நிலையில் அவருக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை.

மாகாண சபை உறுப்பினராக காணப்பட்ட ஜீ.குணசீலனுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதும், குறித்த பத்திரத்தை பெற்றுக்கொள்ள சிறிது காலம் தேவை என்பதற்காக வட மாகாண சபையின் அவைத்தலைர் சி.வி.கே.சிவஞானத்தினால் மீளவும் திருப்பி பெற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் மாகாண சபையின் புதிய உறுப்பினர்களாக கடந்த ஒரு வருடத்திற்குள் பொறுப்பேற்றுக் கொண்ட மேலும் 4 உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments