அரசியல் கைதிகள் விவகாரம்: ஜநாவிற்கு மகஜர்!


அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபை ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும். இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் அரசியல் கைதிகளினை விடுதலை செய்ய வலியுறுத்தி அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் எனவும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் வலியுறுத்தியுள்ளது.

இன்றைய தினமான திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் விடுதலைக்கான நடை போராட்டத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தியும் தமது கோரிக்கைகளை வலியுறுத்தியும் மகஜரொன்று ஜநாவிற்கென கையளிக்கப்பட்டுள்ளது.

மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமீனன் தலைமையில் நடைபயண போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெண் மாணவிகள் என அனைவரும் ஐ.நாவின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மகஜரை கையளித்திருந்தனர்.

கடந்த சனிக்கிழமை நடைபயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க முடியவில்லை. இதன் காரணமாக இன்றைய தினமான திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் யாழ்.நகரில் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் மாணவர்களது மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.




No comments