சிங்கள இனம் அழிந்துவருகிறதாம் - இனப்படுகொலையாளிகளின் கண்டுபிடிப்பு


சிங்கள இனம் அழிந்து வரும் இனங்களில் ஒன்று என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். உலகில் அழிந்துவரும் இனங்களில், சிங்கள இனம் மூன்றாம் இடத்தில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அரநாயக்க பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்க நிபுணர் ஒருவர் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வின்போதே இவ்விடயம் கண்டறியப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் செவ் இந்தியர்கள், எஸ்கிமோக்கள் மற்றும் சிங்களம் ஆகிய இனங்களே உலகில் அழிவடைந்து வரும் இனங்களாக அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய கூறினார்.

இவ்விடயம் தொடர்பாக பலமுறை ஊடகங்களில் தெரியப்படுத்தியபோதும் ஊடகங்கள் இவைகளில் கவனம் செலுத்தவில்லையெனவும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இந் நிலையில் அழிவரும் சிங்கள இனத்தை பாதுகாக்கும் பொருட்டு, மகாநாயக்க தேரர்களே அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தமிழ் மக்கள்மீது ஆண்டாண்டு காலமாக இன அழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனை தடுத்து நிறுத்த சர்வதேச விசாரணை அவசியம் என்றும் வடக்கு மாகாண சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இலங்கையில் இன விருத்தியில் தமிழ் இனம் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, புள்ளி விபரங்கள்மூலம் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments