முதலமைச்சர் கதிரையே வேண்டும்:சீ.வீ.கே!

கொழும்பில்; ஆட்சி யாருடையதென நாடே அல்லாடிக்கொண்டிருக்கையில் மீண்டும் தனது முதலமைச்சர் கனவுடன் கடையை திறந்துள்ளார் சீ.வீ.கே.சிவஞானம். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜா போட்டியிடாவிடத்து நானே முதலமைச்சர் வேட்பாளர் என சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்ய வேண்டுமென்று முன்மொழியப்பட்ட போது, மாவை சேனாதிராஜாவும் கைவிட்டதால், தற்போது அநுபவிக்கும் நிலை ஏமாற்றத்திற்குரியது. மாவட்டக் கிளையின் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர், தமிழரசு கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமென்றும், தமிழரசு கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஆகக்குறைந்த சேவைக் காலத்தினைக் கொண்டவராகவும் இருக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொதுவாக மாவை சேனாதிராஜா முதலமைச்சராக வர விருப்பம் தெரிவித்த காரணத்தினால்  மாவை சேனாதிராஜாவை ஆதரிப்பேன். சில சமயங்களில் மாவை சேனாதிராஜா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்படுமேயானால் அந்த இடத்தில், அடுத்த தெரிவாக, உரித்துடையவன் நான் என்பதே எனது நிலைப்பாடு. அந்த சந்தர்ப்பத்தில், எனது கோரிக்கையை முன்வைப்பேன்.
கட்சியின் செயல்நிலை மற்றும் மாகாண அங்கிகாரங்கள், கடந்த 5 வருடங்களில் நான் செயற்பட்ட விதங்கள், அநுபவங்கள், அறிவுகள், இவற்றின் அடிப்படையில், அந்தத் தகுதி எனக்கு இருக்கு என்றதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றேன். ஆகவே, மாவை சேனாதிராஜா போட்டியிடாத சூழ்நிலையில் எனது கோரிக்கையை வலியுறுத்துவேன் என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் முதலாவது தேர்தல் காலத்திலும் தானே முதலமைச்சர் வேட்பாளரென கடை கட்டத்தொடங்கிய சீ.வீ.கே.சிவஞானம் பின்னர் தேர்தலில் போட்டியிட ஆசனத்தை பெறவே திண்டாடவேண்டியிருந்தது.

வென்ற பின்னரும் முதலமைச்சர் ,அமைச்சரென தொடங்கி கடைசியில் அவைத்தலைவர் கதிரையுடன் அவர் ஓயவேண்டியிருந்தது.

பின்னர் முதலமைச்சராக இருந்த சி.வி.விக்கினேஸ்வரனிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முதலமைச்சர் கதிரையில் பின்கதவால் ஏறமுற்பட்ட அவரது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது மாவைக்கு பதிலாக சிறீதரனை முதலமைச்சர் வேட்பாளராக்க திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சீ.வி,கே.சிவஞானம் இத்தகைய அறிவிப்பினை விடுத்துள்ளார். 

No comments