ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் - புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி

ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கடந்த மாகாணசபை தேர்தலில் களமிறங்கிய அனந்தி சசிதரன், சிறிது காலத்திலேயே கட்சியின் விதிமுறைகளை மீறியதாக தமிழரசுக்கட்சியால் குற்றம் சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த நிலைமையில், தமிழரசுக்கட்சிக்குள் விக்னேஸ்வரன்- சுமந்திரன் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, மாகாணசபைக்குள் இரண்டு அணிகள் உருவாகின. முதலமைச்சர் தலைமையில் ஒரு அணி செயற்பட்டது. சுமந்திரன் ஆதரவு அணி, முதலமைச்சருக்கு எதிராக செயற்பட்டது.

அனந்தி சசிதரன், முதலமைச்சர் ஆதரவு அணியில் செயற்பட்டார். இனி தமிழரசுக்கட்சியில் இணைந்து செயற்பட முடியாதென்ற முடிவிற்கு வந்ததன் பின்னர் அனந்தி சசிதரன் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். முதலமைச்சரும் புதிய கட்சியை ஆரம்பிக்க முயற்சித்து வரும் நிலையில், அனந்தி பதிவுசெய்யப்பட்ட கட்சியொன்றை வாங்கினால் அந்த கட்சியின் ஊடாக களமிறங்கலாமென திட்டமிட்டதாகவும் தெரிகிறது. ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட கட்சியொன்றை வாங்கும் முயற்சியில் அனந்தி சசிதரன் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது தனது புதிய கட்சிக்கு ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் என்ற பெயரை வைக்க தீர்மானித்துள்ளதாக  நம்பகரமாக அறிந்துள்ளது. வரும் வியாழக்கிழமை அல்லது மிக விரைவில் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நடக்கலாமென தெரிகிறது.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் இந்த கட்சியின் ஊடாக க.வி.விக்னேஸ்வரன் அணி களமிறங்கும் வாய்ப்பை நிராகரிக்கவும் முடியாதென, முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள்  தெரிவித்தன.

No comments