அம்மாச்சி பெயருடன் கடமையிலிருந்து விடைபெற்றார் முதலமைச்சர்!


அம்மாச்சி பெயரிலான பாரம்பரிய உணவகத்தை அதனை அதன் சொந்த பெயரில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் திறந்து வைத்து பதவியிலிருந்து விடைபெற்றுள்ளார்.தனது கடமையின் நிமித்தமான இறுதி நிகழ்வாக காரைநகர் பிரதேசசபையின் கசூரினா சுற்றுலாமையத்தில் 
முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்தை இன்று மாலை அவர் திறந்துவைத்துள்ளார்.

எனது அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் சுமார் 11.43 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவுகளை சமைத்து வழங்கக்கூடிய அம்மாச்சி உணவகத்தை திறந்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எம்மவர்களுக்கு அம்மாச்சி என்ற உரிமையுடன் கூடிய பாரம்பரிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவதில் சிலருக்கு இ~;டமில்லை. மாறாக “ஹெலபொஜூன்” என்ற சிங்களப் பதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று துடியாகக் துடிக்கின்றார்கள். எமது அலுவலர்களும் பிரதி அமைச்சரைப் பகைக்கக் கூடாது என்ற அடிப்படையில் அம்மாச்சி என்பதற்குப் பதிலாக, ஹெலபொஜூனுக்குப் பதில் “பாரம்பரிய உணவகம்” என மாற்றிவிட்டார்கள். தங்கள் அன்புத் தாயாராகிய இலட்சுமிப் பிள்ளையின் பெயரை சிங்கள ஆட்சியாளர்கள் கோவிப்பார்கள் என்ற காரணத்தினால் பொடிமெனிக்கே என்று மாற்றக்கூடிய சிந்தனையாளர்களே இன்று அம்மாச்சி என்ற பேரை மெல்ல நீக்கி பாரம்பரிய உணவகம் என மாற்ற முனைந்திருக்கின்றார்கள். நான் இறுக்கமாகக் கூறிவிட்டேன் அம்மாச்சி என்ற பெயர் காணப்படின் மட்டுந்தான் நான் இத் திறப்பு விழாவிற்கு வருவேன் என்று. எமது பகுதியில் எமது மாகாணசபையின் நிதியிலிருந்து அமைக்கப்பட்ட உணவகத்திற்கு அன்பு கலந்த அம்மாச்சி என்ற பெயரை வைப்பதற்கு இவ்வளவு தடைகள் எனின் ஏனைய விடயங்கள் பற்றி கூறத் தேவையில்லை.
ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும் மற்றும் அலுவலர்களும் சுயமாகச் சிந்திக்கத் திராணியற்றவர்களாக அரசாங்கத்தின் அடிவருடிகளாக அவர்களைத் திருப்திப்படுத்துகின்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனைக்குரியது. ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகளாக என்றென்றும்  இருக்க விரும்புகின்ற சிலரின் அப்பட்டமான கீழ்த்தரமான நடவடிக்கைகளாலேயே சிங்கள ஆட்சியாளர்கள் எம்மீது குதிரை விடப் பார்க்கின்றார்கள். நான் சிங்கள சகோதரர்களைக் குறைகூற வரவில்லை. என் தமிழ்ச் சகோதர சகோதரிகளின் வருத்தத்திற்குரிய செயற்பாட்டையே கூறவருகின்றேன். 

இன்றைய தினம் இந்த அம்மாச்சி உணவகம் காரைநகர் பகுதியில் சிறப்பாக திறந்து வைக்கப்படுகின்றது. இவ்வுணவகத்தில் எமது பகுதிகளில் கிடைக்கக்கூடியதும் தமிழர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை பிரதிபலிக்கின்றதுமான உணவுகள் உடனேயே தயாரித்து சுடச்சுட வழங்கப்பட இருக்கின்றது. கசூரினா கடற்கரை சிறப்பாக இயங்கும் போது இப்பகுதிகளுக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். அதனால் அம்மாச்சி உணவகத்தின் விற்பனைகளும் அதிகரிக்கும். அத்துடன் எமது பாரம்பரிய உணவுகளை ஏனைய இனத்தைச் சார்ந்த மக்களும் உண்டு மகிழ்வதற்கு ஏற்றவகையாக இந்த உணவகம் தமது சேவைகளை விஸ்தரிக்க இருக்கின்றது. இங்கு உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய விண்ணப்பித்தவர்களை இனங்கண்டு நேர்முகத் தெரிவுவாயிலாக தெரிவுசெய்து உணவுகளைத் தயாரித்து வழங்க அனுமதிப்பதன் மூலம் தரமானஉணவு  வகைகளை இம் மக்களுக்கு வழங்கமுடியும். 

முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களின் சிந்தனையில் உதித்த நல்லதொரு செயற்பாட்டிற்கு செயல்வடிவம் வழங்கவேண்டியது எமது அனைவரினதும் கடமையாகும். 

நான் கடந்த ஐந்து வருடங்களாக வடபகுதியின் முதலமைச்சராக பணிபுரிந்துவருவது பலருக்கு மிக்க இடைஞ்சல்களை கொடுத்திருப்பதை நான் உணர்கின்றேன். ஒவ்வொருவரும் தாம் தாம் நினைத்த வகையில் செயற்படுவதற்கும் தமது நேர்வழியற்ற சிந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் எனது இருப்பு மிக்க இடைஞ்சல்களை கொடுத்திருப்பதாக நான் உணர்கின்றேன். வடமாகாணசபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுபெறுவதால் இனி நினைத்தபடி செயலாற்ற முடியும் எனத் தயவு செய்து ஒருவரும் எண்ண வேண்டாம். எமது பதவி நிறைவுறுத்தப்பட்டாலும் தமிழர்களின் விடயங்களில் நாம் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்போம் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

முஸ்லீம் இனத்தைச் சார்ந்த மக்கள் தாம் பல்வேறு கட்சிகளாக அரசியல் முன்னெடுப்புக்களில் பிரிந்து நின்று செயற்படுகின்ற போதும் முஸ்லீம் இனத்தின் நலனுக்கு எதிரான வகையில் ஏதாவது நிகழ்வுகள் அல்லது வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போது அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தமது அரசியல் வேறுபாடுகளை மறந்து தமது உரிமைக்கான ஏகோபித்த குரலை கொடுத்து தமது உரிமைகளை பெற்றுக் கொள்கின்றார்கள். எம்மவர்களோ மற்றையவர்களின் குலம் கோத்திரத்தை ஆராய்வதிலேயே பொழுதைக் கழிக்கின்றார்கள். 

சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் அவர்கள் பல்வேறு செயற்திட்டங்களை வகுத்து சுற்றுலாத்துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்ற இவ் இனிய வேளையில் பாரம்பரிய உணவகங்களும் தமக்குப் பெருமை சேர்க்கின்ற அம்மாச்சி உணவகம் என்ற பெயருடன் பல பிரதேசங்களிலும் செயற்பட்டு எமது பாரம்பரிய உணவு முறைகளை நாட்டுக்கும் மூவின மக்களுக்கும் ஏன் வெளிநாட்டு மக்களுக்கும் கூட கிடைக்க வழி செய்ய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments