ஈழப் படுகொலை நாயகிக்கு பிராஸ்சின் தேசிய விருது !


1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததுமுதல் தமிழர் தாயகப்பிரதேசங்கள் எங்கும் விமானக் குண்டுவீச்சுக்களையும் ஆட்லறித் தாக்குதல்களையும் விரைவுபடுத்தி தமிழர்களை கென்றுகுவித்த போர்க் குற்றவாளியான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது “Commandeur de la Legion D’Honneur” வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரான்ஸின் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோனின் சார்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ இந்த விருதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கையளித்திருக்கிறார்.

ஜனாதிபதி குமாரதுங்க இலங்கையின் நான்காவது ஜனாதிபதியாக 1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார். அதற்கு முன்னர் அவர் மேல் மாகாண முதலமைச்சராகவும் பிரதமராகவும் பதவி வகித்திருந்தார்.

சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில்தான் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் பல்வேறு படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. நவாலி தேவாலயப் படுகொலை, செம்மணிப் படுகொலைகள் உள்ளிட்டவை அவற்றில் முக்கியமானவை.

ஜனாதிபதி குமாரதுங்க தற்போது பல கௌரவ பதவிகளை வகித்து வருகிறார். அவற்றில் முன்னாள் ஜனநாயக ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களுக்கான உலகளாவிய பிரதான மன்றம், உலகளாவிய தலைமைத்துவ மன்றம், உலகளாவிய கிளின்டன் நிலையம் என்பவற்றிலும் பல கௌரவ பதவிகளை வகிக்கின்றமை தெரிந்ததே.

அத்துடன் தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார்.

No comments