ஆவா குழுவும் என்னுடையதா?:முதலமைச்சர் கேள்வி!


தமிழ் மக்கள் தமது உரிமைகளை, உரித்துக்களை, தன்மானத்தை எப்பொழுது வலியுறுத்தப் பார்க்கின்றார்களோ அப்போது அவ்வாறான காரியங்களில் ஈடுபடுவோர்களைத் தீவிரவாதிகள் என்றோ, பயங்கரவாதிகள் என்றோ, புலிகள் என்றோ, வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் என்றோ, நாட்டைப் பிரிப்பவர்கள் என்றோ அவர்களை அடையாளப்படுத்தி அவர்களைப் பின்வாங்க வைத்துவிடுவார்கள். இதற்குப் பயந்தே எமது தமிழ்த் தலைவர்கள் பெரும்பான்மையினர் தருவதாகக் கூறும் அரசியல் தீர்வுகளுக்குச் சம்மதம் தெரிவித்து வருகின்றனதென தெரிவித்துள்ளார் வடக்கு முதலமைச்சா சி.வி.விக்கினேஸ்வரன்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகைச் செய்தி வாசித்தேன். “இன்று வடக்கில் செயற்படும் ஆவாக்குழு உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சரின் முன்னாள் புலி உறுப்பினர்களே. விடுதலைப்புலிகளின் சிந்தனை, இனவாதம் மற்றும் ஈழப் பிரிவினை வாதத்தை அவர் அங்குள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார்” என்று பொது எதிரணி உறுப்பினர் ஒருவர் கூறியதாகச் செய்தியைக் கண்டேன். இதன் தாற்பரியம் என்ன? தமிழ் மக்கள் தமது உரிமைகளை, உரித்துக்களை, தன்மானத்தை எப்பொழுது வலியுறுத்தப் பார்க்கின்றார்களோ அப்போது அவ்வாறான காரியங்களில் ஈடுபடுவோர்களைத் தீவிரவாதிகள் என்றோ, பயங்கரவாதிகள் என்றோ, புலிகள் என்றோ, வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் என்றோ, நாட்டைப் பிரிப்பவர்கள் என்றோ அவர்களை அடையாளப்படுத்தி அவர்களைப் பின்வாங்க வைத்துவிடுவார்கள். இதற்குப் பயந்தே எமது தமிழ்த் தலைவர்கள் பெரும்பான்மையினர் தருவதாகக் கூறும் அரசியல் தீர்வுகளுக்குச் சம்மதம் தெரிவித்து வருகின்றனர். 

பிரச்சனை எமது, பாதிக்கப்பட்டோர் நாங்கள், எமது வருங்காலமே எமது கரிசனை ஆனால் தீர்வானது தம்மால்த்தான் தரப்பட வேண்டும் என்ற மனோநிலையில் பெரும்பான்மையினர் இருக்கின்றார்கள். 

1919ம் ஆண்டில் அமைச்சர் சுவாமிநாதன் அவர்களின் தந்தைவழி உறவினரும் என் தாய்வழி உறவினருமான சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் அப்போதைய பெரும்பான்மையினத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட காலத்தில் இருந்து அரச அதிகாரத்தைப் பெரும்பான்மையினர் தம்கைவசம் ஆக்கிக் கொண்டார்கள். அதற்கு முன் 1915ல் சேர் பொன்னம்பலம் இராமநாதனைக் குதிரை வண்டியில் ஏற்றி தாமே கப்பற் துறைமுகத்தில் இருந்து வாட்ப்ளேஸ் இல்லம் வரையில் அவரை இழுத்து வந்த அதே தலைவர்களே 1919ல் மனமாற்றம் அடைந்தார்கள். 

இலங்கையில் இன ரீதியான பிரதிநிதித்துவத்தை வெள்ளையர்களிடம் கேட்ட சபாபதி அவர்களின் தலைமையின் கீழான யாழ் மக்கள் அமைப்பின் மனதை சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் ஊடாக மாற்றி பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தைப் பெற அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றார்கள் சிங்களத் தலைவர்கள். அதன் மூலம் தன்னாட்சியை ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வழி வகுத்தார்கள். அதன் பின்னர் பெரும்பான்மை அரசியல்த் தலைவர்களின் போக்கு மாற்றமடைந்தது. சிறுபான்மையினரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணங்கள் அவர்களிடையே வலுப்பெற்றன. அந்த நிலை இன்றும் மாறவில்லை. தம்மை மாற்றவோ, உண்மையை உணரவோ, உலக நாடுகளின் மனித உரிமைக் கோட்பாடுகளை மதிக்கவோ அவர்கள் இப்பொழுதும் தயாரில்லை. மனிதப் படுகொலை செய்த இராணுவத்தினரை தண்டிக்கப்படாது என்பதே எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் திடமான எதிர்பார்ப்பு. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில்த்தான் தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கேட்டால் பயங்கரவாதி, தீவிரவாதி, புலி என்று நாமஞ் சூட்டி அவர்கள் வாய்களை அடைத்து விடுகின்றார்கள். இதனால்த்தான் எம் தலைவர்கள் “எமக்கேன் இந்த வம்பு?” என்று அவர்களின் ஆற்றுப்படுத்தலுக்குள் அகப்பட்டு நிற்கின்றார்கள். 

அதாவது இந் நாடு எங்களுடையது. சிறுபான்மையினர் வந்தேறு குடிகள். மரத்தைச் சுற்றி வளரும் கொடிகள் போன்று எமக்கு அனுசரணையாக சிறுபான்மையினர் இந் நாட்டில் வாழ வேண்டுமே ஒளிய தமக்கென உரித்துக்கள் எவற்றையும் பெற எத்தனிக்கப்படாது என்பதே அவர்கள் கருத்து. 

இன்றும் ஸ்ரீலங்கா என்ற நாட்டுக்குள் வரும் வெளி நாட்டுப் பயணிகளுக்குக் கூறப்படுவது “உலகிலுள்ள சிறப்பனைத்துக்கும் நாமே உறைவிடம். எமது பாரம்பரியம் 2500 வருடங்களுக்கு மேற்பட்டது. தமிழர்கள் 10 ம் நூற்றாண்டில் சோழர் காலத்திலே வந்தேறிய குடிகள்” என்று. உண்மையென்ன? சிங்கள மொழி பிறந்ததே கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. அதற்கு முன்னர் சிங்கள மொழி பேசுவோர் இந் நாட்டில் இருக்கவில்லை. மகாவம்சம் கூட பாளிமொழியிலேயே எழுதப்பட்டது. கி.பி 6ம், 7ம் நூற்றாண்டிலேயே அம் மொழி பேசும் மக்கட் கூட்டம் அடையாளப்படுத்தப்பட்டார்கள் என்றால் அவர்கள் சிங்களப் பாரம்பரியம் 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கூறுவது எங்கனம்? இவற்றை நாங்கள் கேட்க விடாமல் பண்ணவே எங்கள் வாய்கள் அடைக்கப்படுகின்றன. வன்முறைகள் ஏவப்படுகின்றன. 

இலங்கையில் பெரும்பான்மை மக்களிடையே எழுந்துள்ள ஓரியல்பு சிந்தனை எமது நாட்டின் ஒற்றுமைக்குத் தடையாக இருக்கின்றது என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில் சொல்ல வேண்டியிருப்பதாகவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments