ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் சொல்வதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை - மஹிந்த சமரசிங்க

ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ராட் ஹுசைன் சொல்வதையெல்லாம்கேட்டு செயற்பட வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாதென தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கைக்கு யாரும் கட்டளையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லாட்சியாளர்கள், புதிய அரசமைப்பு உருவாக்க வேண்டுமென செய்த் அல் ராட் ஹுசைன் பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பதிலளித்த அவர், இலங்கையில் புதிய அரசமைப்பு உருவாக்குதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவகின்றன. இதனிடையே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமற் செய்யவேண்டுமென ஜே.வி.பியினர் தெரிவித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்ட அவர், இவை தொடர்பில் சுதந்திர கட்சியின் மத்திய மற்றும் செயற்குழுகள் கூடி இதுவரையில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாதென்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றார்.

2015 ஆம் ஆண்டு,  ஜெனீவா மனித உரிமைகள்  பேரவையில், அமைச்சர் மங்கள சமரவீர, மரண தண்டனையை ஒருபோதும் இலங்கை அமுல்படுத்தாது என உறுதியளித்திருந்தார். ஆனால் மீண்டும் மரணதண்டனையை அமுல்படுத்தப்போவதாக சொல்கிறீர்களே என கேட்கப்பட்டதற்கு,

“மரண தண்டனையை அமுலுப்படுத்தவேண்டிய தேவை உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரமும் கிடைத்துள்ளதென பதிலளித்த அவர், அமைச்சர் மங்கள சமரவீர மாத்திரமல்லாது ஏனையோரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது. தேவையேற்படின் இவைதொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் தெளிவுப்படுத்துவோம் என்றார்.

No comments