பொலிஸாரின் மரணத்தில் சந்தேகம்


எமது மகன் உயிரை மாய்த்ததாக  வைத்தியரின் அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக அவரது  மரணத்தில் எமக்கு சந்தேகம் உள்ளது என துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த  பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (3) மல்லாகம் பகுதியில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  காரியாலயத்தில் கடமையில் இருந்த திருகோணமலை பகுதியை சேர்ந்த என்.நஸீர்(வயது-22) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த பொலிஸ்  உத்தியோகத்தரின்  மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது எமது மகன்   தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் சேவையில் ஒரு வருட பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நியமனம் பெற்று கடமையாற்றி வந்துள்ளார்.அவர் சம்பவம் இடம்பெற்ற தினம் காலை எங்கள் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பளம் எடுத்திருப்பதாகவும் அதனை வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் உம்மாவிடம் அந்த பணத்தை வங்கியில் இருந்து பெற்று கொடுக்குமாறு கூறியிருந்தார்.

பின்னர் பின்னேரம் ஒரு தொலைபேசி அழைப்பு எங்களுக்கு வந்தது உங்கள் மகன் கடமையில் இருக்கும் போது தவறுதலாக துப்பாக்கி வெடித்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்பட்டது.பின்னர் சில நேரத்தின் பின்னர் மற்றுமொரு அழைப்பில் மகன் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கபப்ட்டது.

ஆனால் இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு எந்த காரணமும் இல்லை. நல்ல மனநிலையில் தான் இருந்தார்.  இந்த மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் நிலவுகின்றது சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எம்முடன் கதைக்கும் போது அவர் தற்கொலை செய்வதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என கூறியிருந்தார்.எனவே உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்  என சித்தப்பா மற்றும் சகோதரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

No comments