தமிழரசு தரம் தாழ்ந்துவிட்டதா ? - ரெலோ நிகழ்விற்கு சயந்தன் அழையா விருந்தாளியே !
வடமராட்சி கரவெட்டியில் நடைபெற்ற, வெலிக்கடைப் படுகொலை மற்றும் ஆடிக்கலவர நினைவேந்தல் நிகழ்விற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தன் தம்மால் அழைக்கப்படாத விருந்தாளியாகவே கலந்துகொண்டதாக ரெலோ வட்டதாரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பங்காளிக் கட்சியின் தலைவர் எனும் அடிப்படையில் குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாகப் பங்கேற்குமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவுக்கே அழைப்பு அனுப்பியதை உறுதிப்படுத்தியுள்ள ரெலோ தலைவர் ஒருவர் மாவை தன்னால் நிகழ்வில் பங்கேற்க முடியாது எனக்கூறி தமது அழைப்பினை உதாசீனம் செய்ததோடு மட்டுமல்லாது நிகழ்வில் முக்கியத்துவம் உணராது தமது அழைப்பினை கேலிக்கூத்தாக்கும்வகையில் சயந்தனையே நிகழ்விற்கு அனுப்ப முடியும் என திடீரென சயந்தனை அனுப்பிவைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ரெலோ இயக்கம் தரம்தாழ்ந்துவிடவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தமிழரசுக் கட்சியே என்ன நிகழ்விற்கு எவரை அனுப்பவேண்டும் என்ற நிலைகூட தெரியாத நிலையில் தரம்தாழ்ந்துவிட்டதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்நிலையில் சயந்தனை நிகழ்விற்கு அனுப்புவது தொடர்பில் தமக்கு உடன்பாடு ஏற்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த சிவாஜிலிங்கம் ரெலோத் தலைவர்களில் ஒருவரான சிறிக்காந்தா குறித்த விடயத்தில் விடாப்பிடியாக நின்றதாக குறிப்பிட்டிருக்கிறார். வெலிக்கடைப் படுகொலை மற்றும் ஆடிக்கலவரங்கள் நிகழ்ந்தபோது பால்குடிக் குழந்தையாக இருந்த சயந்தனுக்கு அதன் தார்ப்பரியங்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லை தற்போதும் அவர் அதனை உணர்ந்து செயலாற்றக்கூடியவராக இருக்கவில்லை எனக் குறிப்பிட்ட சிவாஜிலிங்கம் ஒருவேளை சயந்தன் தனது குறளிவித்தையை மேடைப்பேச்சின்போது கட்ட முற்பட்டிருந்தால் நிகழ்விற்கு தலைமைதாங்கிய தான் எந்நேரமும் சயந்தனின் பேச்சிற்குப் பதிலடி கொடுக்கக் தயாராகவே இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை வரதராஜப் பெருமாள் அழைக்கப்பட்டது தொடர்பில் உண்டாகிய விமர்சனங்களுக்கு பதிலளிப்பதை ரெலோ தவிர்த்திருந்தது.
Post a Comment