அரசமைப்பு உருவாக்கம் தோல்வியடைந்தால் பிரிவினை உருவாகும் - நோர்வே அமைச்சரிடம் சம்பந்தன் தெரிவிப்பு


புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில், அது மேலும் மக்களிடையே பிரிவினையை உருவாக்குமென, எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும், மென்போக்காளர்கள் ஒன்று சேர்ந்து இயங்குகின்ற பட்சத்தில் புதிய அரசமைப்பானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள நோர்வேயின் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் ஜென் ப்ரோலிச் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவிவுக்கும் இடையிலான சந்திப்பு, நாடாளுமன்றிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் தற்கால அரசியல் நிலை குறித்து செயலாளரை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன் அவர்கள் கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் விசேடமாக இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவது தொடர்பில், நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், மக்கள் பிரதிநிதிகளாக எம்முன்னே எழுந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை உதாசீனம்  முடியாது என தெரிவித்த அதேவேளை, இந்த முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில் அது மேலும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் எனவும் வலியுறுத்தினார்.

No comments