மன்னார் மனிதப் புதைகுழி - மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பார்வையிட்டார்


மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று(11) திங்கட்கிழமை 11ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த அகழ்வு பணியை மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்ரர் சோசை அடிகளார் ஆகியோர் இன்று காலை நேரடியாக சென்று அவதானித்துள்ளனர்.

-மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மீண்டும் இன்று திங்கட்கிழமை(11) காலை 7.00 மணியளவில் 11 ஆவது நாளாக குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய நாள் அகழ்வு பணியும் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினராலும் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்றைய நாள் அகழ்வுப்பணிக்கான ஒத்துழைப்பை வழங்குவதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பாக அதன் உத்தியோகஸ்தர்களும், விசேட தடவியல் நிபுணத்துவ காவல்துறையினர் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்,சட்டத்தரணிகள் என பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்

இதன் போதே மன்னார் மறை மாவட்ட ஆயரும் குரு முதல்வரும் காலை குறித்த விற்பனை நிலையத்திற்கு சென்று அவ் வளாகத்தில் இடம் பெற்று வரும் மனித எலும்புக்கூடு அகழ்வுகளை நேரடியாக அவதானித்ததோடு அகழ்வு தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார்கள்

No comments