வடமராட்சி கிழக்கு ஆக்கிரமிப்பு:கைவிட்டுப்போகின்றதா நிலைமை?


வடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்பவர்களை சட்டரீதியாக தண்டிப்பதென்பது சாத்தியமற்றதென்பது உறுதியாகியுள்ளது.கடந்த வாரம் இரவு வேளையில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்தவர்களை உள்ளூர் மீனவர்கள் பிடித்து திணைக்களத்திடம் ஒப்படைத்த நிலையில் பின்னராக அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள்  அனுமதிக்கப்பட்ட நேரத்தினைத் தாண்டிய நிலையில் தொழிலில் ஈடுபட்டிருந்த சமயம் உள்ளூர் மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர்.அவ்வாறு 8 மீனவர்களும் 3 படகுகளும் கைப்பற்றப்பட்டு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுமிருந்தது.இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட மீனவர்களை திணைக்கள அதிகாரிகள்; கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

இதன்போது குறித்த 8 மீனவர்களும் தாம் குற்றமற்ற சுற்றவாளிகள் என நீதிமன்றில் தெரிவித்தனர். இதனால் குறித்த வழக்கினை ஆராய்ந்த நீதிபதி மா.கணேசராஜா 8 மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்லுமாறும் படகு , இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை 5 லட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறும் உத்தரவிட்டதோடு குறித்த வழக்கினை எதிர் வரும் 25ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

முன்னதாக சட்டவிரோத கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை திருப்பி அனுப்பிவைக்காது பேணுவதில் சுமந்திரன் மற்றும் அவரது ஆதரவு கும்பல் மும்முரமாக ஈடுபட்டுள்ளது தெரிந்ததே.சட்டவிரோத கடலட்டை பிடிப்பினை கண்டறியக்கூடிய வலுவுடன் வடக்கிலுள்ள கடற்றொழில் நீரியல் திணைக்களத்தினர் இல்லையென்பது அவர்களிற்கு தெரியும்.அதனை தாண்டி உள்ளுர் மீனவர்கள் அவர்களை பிடித்து ஒப்படைத்தாலும் சட்ட ஓட்டைகளின் ஊடாக தப்பிக்கவைக்கமுடியுமென அறிந்துள்ளதாலேயே நிபந்தனை அடிப்படையில் அவர்களை அனுமதிக்க கோரியமை அம்பலமாகியுள்ளது.

No comments