பிரதி சபாநாயகர் நியமனம் இன்று! சுதர்ஷனி பெர்ணாந்தோபுள்ளேயின் பெயர் பரிந்துரை!

பாராளுமன்றத்திற்காக பிரதி சபாநாயகர் நியமனம் இன்று இடம்பெறவுள்ளது.

இன்று பாராளுமன்றம் கூடும் போது பிரதி சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக இருந்த திலங்க சுமதிபால அரசாங்கத்திலிருந்து விலகியதையடுத்து அந்தப்பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

அவர் விலகியது தொடர்பாக இன்று சபாநாயகரால் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி சார்பாக பிரதி சபாநாயகர் பதவிக்கு சுதர்ஷனி பெர்ணாந்தோபுள்ளேயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் கூடவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முன்வந்தால் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதேவேளை இன்று பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று பகல் 12.00 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். 

No comments