“எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பர்“ - முதலமைச்சர் விக்கினேஸ்வரன்


சிலர் தன்னை அரசியலில் இருந்து வெளியேற்ற துடித்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உரைகள் அடங்கிய “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்
இன்று ஞாயிற்றுக்கிழமை (24.06.2018) நடைபெற்றது. நிகழ்வில் ஏற்புரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
அவர் தனது உரையில்,

“என்னை இந்த முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்தவர் சம்பந்தனே. இதுவரையில் அவருக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விஸ்வாசமாகவே நான் நடந்து வந்துள்ளேன். கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டுவராது இருக்க முடியாதவன் நான். அதனால் எனக்கும் கட்சிக்கும் இடையில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பினும் என் நிலையைப் புரிந்து நடவடிக்கைகளில் இறங்கிவந்தவர் கௌரவ சம்பந்தன் அவர்கள். ஆனால் கட்சியில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டுள்ளார்கள். கௌரவ சம்பந்தன் அவர்களின் வருகையாலோ என்னவோ கூட்டணி சேர்ந்த பலர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற வந்துள்ளனர். அவருக்கும் அவ்வாறான பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

அரசியல் ரீதியாக எமது எல்லாக் கட்சிகளின் ஒற்றுமையையே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். ஒற்றுமையானது கொள்கை ரீதியிலேயே அமைய வேண்டும். தம்பி பிரபாகரன் அவர்கள் தனது இயக்கத்திற்கு எதிராக நடந்து கொண்ட கட்சிகள் பலவற்றைக்கூட ஒன்று சேர்த்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்கினார். அப்போது கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட கட்சிகள் சில இன்று வெளியிலே நிற்கின்றார்கள். அது கொள்கை முரண்பாடுகள் காரணமாக இருக்கலாம். தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இருக்கலாம். ஆனால் ஒரு ஏற்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையுஞ் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது. மத்தியில் கூட்டாட்சி மாகாணத்தில் தன்னாட்சி என்று கூறிவிட்டு மத்தியின் முகவர்களாக நடந்து கொண்டு வந்திருப்பவர்கள் எமது பயணத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடியவர்கள். அதே போல் தேசியக்கட்சிகளின் அங்கத்தவர்கள் மத்தியின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் எமது உறவுகளாக இருந்தாலும் எமது பயணத்தில் சேரக்கூடியவர்கள் அல்ல.

சிலர் என்னைத் தீவிர போக்குடையவர் என்று கூறுகின்றார்கள். அவர்களை எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசிக்கக் கோருகின்றேன். சிலர் மக்களின் வாக்கெடுக்க அப்படித்தான் விஞ்ஞாபனங்களில் போடவேண்டும்; ஆனால் நாங்கள் அரசியல் செய்ய வேண்டுமென்றால் அவற்றையெல்லாம் புறம்தள்ளி வேலைசெய்ய வேண்டும் என்கிறார்கள். அவ்வாறானவர்கள் தான் என்னைத் தீவிர போக்குடையவர் என்று கூறுகின்றார்கள். அவ்வாறான போக்கை நான் கண்டிக்கின்றேன். மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவது பாவம் என்பதே எனது நிலைப்பாடு. விஞ்ஞாபனங்களில் கூறியிருப்பதை அசட்டை செய்வதாக இருந்தால் அவற்றை மாற்றி மக்களிடம் இருந்து பிறிதொரு முறை அவர்கள் ஆதரவைப் பெறுவது அவசியம்.

அண்மையில் கட்சி நலஞ் சார்ந்து பல உடன்படிக்கைகள் உள்ளுராட்சி மன்றங்களில் எட்டப்பட்டன.  கொள்கை ரீதியாக அவை நடைபெறவில்லை. பதவி ஆசையே முக்கிய குறிக்கோளாக இருந்தது. விரைவில் இவ்வாறான கொள்கை அடிப்படை தவிர்ந்த உடன்பாடுகள் சுய இலாபங்களுக்காக முரண்பாடுகளை வருவிப்பன என்று எதிர்பார்க்கலாம். விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறி எம்மை நாம் விற்கும் நிலைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் சுய கௌரவத்துடனான இணைந்த அரசியலே மத்தியிலும் மாகாணத்திலும் கடைப்படிக்க வேண்டியுள்ளது. வெளியார் குடியேற்றம், பௌத்த விகாரைகள் 131 கட்டப்படுதல் போன்ற எல்லாவற்றிற்கும் சுய கௌரவத்துடனான இணைந்த அரசியலை நாம் நாடாததே காரணம்.

சில தினங்களுக்கு முன் கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இது காறும் இருந்து வந்தவர்கள் இப்பொழுதும் இருந்து வருபவர்கள் கிழக்கு மாகாணத்தில் விட்டுக்கொடுத்ததால் ஏற்பட்ட கெடுதிகள் பற்றி எமக்கறிவித்தார்கள். நாம் வலுவாக இருந்து கொண்டு மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கலாம். ஆனால் நாம் பலம் அற்ற நிலையில் இருந்து கொண்டு விட்டுக்கொடுப்பது எம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமாகும் என்றார்கள். கிழக்கு மாகாணத்தின் தற்போதைய தமிழர் நிலை பரிதாபகரமாக மாறியிருப்பதை எடுத்துரைத்தார்கள். ஆகவே நாம் யாவரும் கூட்டுச் சேர வேண்டும்; ஒன்றுபட வேண்டும் எனும் போது அது கொள்கை அடிப்படையிலேயே நடைபெறவேண்டுமே  ஒளிய கொள்வோனுக்குக் கொத்தடிமையாகும் விதத்தில் நடைபெறக் கூடாது.

தமிழ் மக்களின் அரசியல் நிலை இன்று பரிதாபகரமானதாக மாறியுள்ளது, கட்சி ரீதியாக நாம் பிரிந்துள்ளோம். ஆனால் எமது பல்வேறு  கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் காணும் உள்ளடக்கங்களில் உள்ள முரண்பாடுகள் மிகச் சொற்பமே. 2013ம் ஆண்டு வெளிவந்த எங்கள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அடிப்படையாக வைத்தே நான் எனது கருத்துக்களைத் தெரியப்படுத்தி வந்துள்ளேன்.

அரசியல் யாப்புப் பற்றிய எமது வடமாகாணசபையின் முன்மொழிவுகளும் தமிழ் மக்கள் பேரவையால் அரசாங்கத்திற்குக் கையளிக்கப்பட்ட முன்மொழிவுகளும் அடிப்படையில் பலத்த முரண்பாடுகளைக் கொண்டிருக்க வில்லை. அவை எமது 2013ம் ஆண்டின் விஞ்ஞாபனத்தை அடிப்படையாகக் கொண்டவையே. பின் எதற்காக மாறிய கொள்கைகள் உடையவர்களுடன் சேருகின்றோம், ஒரே கொள்கையுடையோருடன் முரண்டு பிடிக்கின்றோம்? இங்கு தான் தமிழ் மக்களின் தனிப்பட்ட மனோநிலை வெளியாகின்றது. அடிப்படையில் நாங்கள் ஆணைக்குக் கட்டுப்பட ஆயத்தமாய் உள்ளோம். ஆனால் அயலவர்களை ஆதரித்து அரவணைத்து ஆணவத்தை அடக்கி வைத்து பயணம் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றோம். இது இங்கு மட்டுமல்ல் வெளிநாடுகளிலும் தமிழ் மக்களிடையே காணும் ஒரு குணாதிசயம். தன்னைவிட தன்னினத்தவன் எவனும் தகைநிலையடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம். அதனால் மாண்பு மிக்க எமது இனம் சீர்குலைந்து போவதையுஞ் சிறப்பிழந்து போவதையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது” - என்றார்.

No comments