பிரான்ஸ் வில்நெவ் சென்ஜோர்ஜில் நடைபெற்ற தமிழ்ச்சங்க இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 கடந்த சனிக்கிழமை (12) காலை 9.30 மணிக்கு சங்கத்தலைவர் திரு விந்துசன் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைக்கப் பட்டது.
பிரான்சின் தேசியக் கொடியை வில்நெவ் சென்ஜோர்ஜ் நகர சபை விளையாட்டுத்துறை பிரிவுப் பொறுப்பாளரால் ஏற்றி வைக்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு கிருபா அவர்கள் ஏற்றி வைத்தார்.
19.03.1991 அன்று மன்னார் சிலாபத்துறை முகாம் தாக்குதலின் போது வீரச்சாவடைந்த நளினியின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி வைக்க , 2ம் லெப்டினன் கானத்தரிசியின் சகோதரன் மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பாடசாலை கொடி ஏற்றப்பட்டது. இல்லங்களின் கொடிகளை இல்லப் பொறுப்பாளர்கள் ஏற்றி வைத்தனர். ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு மாணவர்களால் உறுதி எடுக்கப்பட்டது.
தமிழர் விளையாட்டுத்துறை  நடுவர்களால் உறுதி எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இல்லங்களின் அணிவகுப்பு இடம் பெற்றது.
சங்கிலியன் இல்லம் எல்லாளன் இல்லம் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டிகள் தொடர்ந்து இடம் பெற்றன.
இடைவேளையின் போது சிறுமிகள் பங்குபற்றிய இசையும் அசைவும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக இடம் பெற்றது. போட்டிகளின் முடிவில் சங்கிலியன் இல்லம் அதிகபுள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றது.
பார்வையாளர்களுக்கு உண்டியல் விநியோகிக்கப்பட்டது. கடந்த வருடம் இவ்விதம் வழங்கப்பட்ட உண்டியல் மூலம் சேகரிக்கப்பட்ட உதவித் தொகையின் மூலம் தாயகத்தில் 200 சிறுவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பரிசளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு. நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் ஒலிக்கப்பட்டு நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

No comments