அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி தயார்! பனங்காட்டான்

புளொட் மற்றும் ரெலோ கட்சிகளை தூக்கி வீசுவது போன்று பேசிவரும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜே.வி.பி.யின் மே தினப் பேரணியில் பங்குபற்றியதும், கூட்டமைப்பின் மே தினப் பேரணிகளை தவிர்த்துக் கொண்டதும் ஏன் என்ற கேள்வி தாயக மக்களை குடைந்து கொண்டிருக்கிறது.

மைத்திரியும் ரணிலும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி என்னும் அரசாங்கம் மூன்று ஆண்டு முடிந்த நிலையில் தங்கள் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டுள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையே புதிதாக 18 அமைச்சர்களையும் அவர்களுக்கான ராஜாங்க அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் நியமனம் செய்த விடயம்.

வெளிப்பார்வைக்கு ஏதோ பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் காட்டப்படினும் அது உண்மையன்று. நிலைமாறுகால அரசாங்கம் ஒன்றின் செயற்பாட்டிலும் மோசமானதாகவே இதனைப் பார்க்க முடிகிறது.

2019 இறுதிப் பகுதியில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தல்வரை பொறிப்பந்தலாக இருக்கும் அரசாங்கத்தை, சரிந்து விழாது பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டில் மைத்திரியும் ரணிலும் (தனித்தனியாக) இயங்குகின்றனர்.

இப்போதைக்கு தங்கள் அரசியல் இலக்கை இவர்கள் இருவரும் பகிரங்கப்படுத்தாவிட்டாலும், இருவருக்கும் மற்றவர் விருப்பும் இலக்கும் என்னவென்பது நன்கு தெரியும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியும் ரணிலும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடவிருப்பதே இவர்கள் தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் ரகசியம்.

இனிமேல் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கு இடமில்லையென்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்து வரும் கருத்து, அவர்கள் தனித்துப் போட்டியிடுவார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

ரணில் விக்கிரமசிங்க இரண்டாண்டுகளுக்கு முன்னரே இதற்குத் தம்மை தயார்படுத்த ஆரம்பித்துவிட்டார்.

இதன் ஓர் அங்கமாக ஐக்கிய தேசிய கட்சியை புனரமைப்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க கட்சியின் குழு ஒன்றை ரணில் நியமித்தார்.

இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் பிரதி பாதுகாப்பு அமைச்சரான றுவான் விஜேவர்த்தன.

இவர் ரணிலின் மைத்துனர். அதாவது, ரணிலின் தாயாரும் றுவானின் தந்தையும் கூடப்பிறந்த சகோதரர்கள். மறுபுறத்தில் றுவானின் தாயார் டட்லி சேனநாயக்காவின் சகோதரரான றொபேர்ட் சேனநாயக்காவின் புதல்வி.

இந்தப் பின்னணியை இவ்விடத்தில் தெரிந்து கொண்டால், ரணில் தமது அரசியல் எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இரத்தம் தண்ணீரிலும் பார்க்க இறுக்கமானது என்பது அரசியலுக்கு மிக அவசியமானது.

ஐக்கிய தேசிய கட்சி இனிவரும் தேர்தல்களில் சிங்கள பௌத்த உட்கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டுமென றுவான் விஜேவர்த்தன தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

இதனை ரணில் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இதற்கியைவாகவே புதிய செயற்குழுவை அவர் நியமித்திருப்பதாகவும் இலங்கையின் ஆங்கிலத் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய செயற்குழுவில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட இடம்பெறவில்லை. (சிலவேளை இனிமேல் இடம்பெறுவார்களோ தெரியாது).

மகிந்தவின் பொதுஜன முன்னணியையும், மைத்திரியின் சுதந்திரக் கட்சி அணியையும் தேர்தலில் நேருக்கு நேராகச் சந்திக்க வேண்டுமானால், ஐக்கிய தேசிய கட்சியும் முன்னைய இரு கட்சிகளின் பாதையில் சிங்கள பௌத்த பேரினவாத சுலோகத்தை தலையில் வைக்க வேண்டுமென ரணில் எண்ணுவதுபோல தெரிகிறது.

தனித்து ஆட்சியை நடத்தவும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவும் இப்பாதையில்தான் பயணிக்க வேண்டுமென ரணில் நினைப்பாரெனில், ஐக்கிய தேசிய கட்சி என்ற பெயரை இவர்கள் இனிமேல் பயன்படுத்தக்கூடாது.

இ;வ்வாறான வெளிக்கள நிலையில் ரணிலையும் அவரது ஐக்கிய தேசிய கட்சியையும் தமிழர் தலைமை அல்லது தமிழ் மக்கள் எவ்வாறு தொடர்ந்து நம்ப முடியுமென்ற கேள்வி முன்னால் எழுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ரணில் மைத்திரி தரப்புடன் கூட்டமைப்பு நம்பிக்கை ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது.

புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதனூடாக தமிழரின் நியாயமான அரசியல் அபிலாசைகளை வழங்கலாமென்ற சிங்கள தரப்பின் கூற்றை நம்பியே கூட்டமைப்பு இவர்களுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தது.

பொதுவாக ரணில் - மைத்திரி அரசுடன் கூட்டமைப்பு ஒத்துப்போவதுபோலவும் இணங்கிச் செயற்படுவதாகவும் சொன்னாலும், உண்மையில் கூட்டமைப்பின் உறவும் தொடர்பும் நம்பிக்கையும் ரணிலுடன்தான் உள்ளது. இது மைத்திரிக்குத் தெரியாததல்ல.

மைத்திரியின் சம்மதத்துடன் சுதந்திரக் கட்சியின் இரு பிரிவினரும் இணைந்து ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த வேளையில் ரணிலைக் காப்பாற்றுவதில் கூட்டமைப்பு பின்னிற்கவில்லை.

இதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் ஆதரவை ரணில் பெற்றுக் கொண்டால், சிங்கள தேசத்தில் அதன் எதிர்விளைவு பாரதூரமாக இருக்குமென்று மைத்திரி எடுத்துச் சொல்லியும் ரணிலோ கூட்டமைப்போ அதனை காதில் போட்டுக் கொள்ளவில்லை.

ஒருவகையில் இனவாதத்தை முன்னிலைப்படுத்தும் கருத்தாகவே மைத்திரியின் கூற்று பலராலும் பார்க்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் சம்பந்தனை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க சகல வழிகளிலும் செயற்பட்டவர் ரணில்.

சம்பந்தனை அப்பதவியில் தொடர்ந்து வைத்திருப்பதில் மைத்திரிக்கு விருப்பமில்லையாயினும், கூட்டமைப்பு அரசுக்கு வழங்கும் ஆதரவை விலத்திக் கொண்டால், அது ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியமைக்க சாத்தியமாகுமென்பது மைத்திரிக்குத் தெரியாததல்ல.

தெற்கில் ரணில் விக்கிரமசிங்க தனது கட்சியை தனித்தியங்கும் பலமுள்ள ஒன்றாக மாற்ற முயற்சிப்பது போன்று, தமிழர் தாயகத்தில் தமிழரசுக் கட்சியை தனதித்தியங்கும் பலமுள்ளதாக மாற்றும் முயற்சியில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் செயற்படுகிறார்.

கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகளை ஓரங்கட்டும் முயற்சியில் சுமந்திரன் தீவிரமாக இறங்கியுள்ளதாக தமிழ் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

உள்;ராட்சிச் சபைத்தேர்தலில் கூட்டமைப்புக்கு கிடைத்த தோல்வி அதன் தோழமைக்கட்சிகள் மீதான சங்தேகத்தை தமிழரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் தராக்கி சிவராம் கொலை சம்பந்தப்பட்ட விடயத்தில் புளொட் இயக்கத்துக்கு தொடர்பிருப்பதாக அண்மைக் காலங்களில் பல இடங்களில் பேசப்பட்டுள்ளது.

கூட்டமைப்பில் புளொட் இப்போதிருப்பதால் தராக்கி கொலை விசாரணையை கூட்டமைப்பு தவிர்த்து வைக்காதென்றும், இதுபற்றிய விசாரணைக்கு ஆதரவளிப்பதாகவும் சுமந்திரன் அறிவித்திருப்பது  புளொட்டுக்கு கூட்டமைப்பிலிருந்து கல்தா கொடுக்கும் நோக்கமுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற நிலைப்பாட்டிலேயே ரெலோவையும் சுமந்திரன் நிறுத்தியுள்ளார். விருப்பமில்லாது போனால் ரெலோ வெளியேறலாமென்ற பாணியில் சுமந்திரன் தெரிவித்திருப்பது ரெலோவினால் ஜீரணிக்க முடியாதது.

கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவை உடனடியாகக் கூட்டுமாறு அதன் தலைவர் சம்பந்தனுக்கு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

ஜே.வி.பி.யினர் இம்முறை தங்கள் மே தினப்பேரணியை யாழ்ப்பாணத்தில் நடத்தினர். தெற்கிலிருந்து வாகனங்களில் கொண்டு சென்று இறக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழரல்லாதவர்கள் இந்தப் பேரணியில் பங்குபற்றினர்.

கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் செஞ்சட்டையணிந்து ஜே.வி.வி. பேரணியில் பங்குபற்றியதும், நெல்லியடியிலும் கிளிநொச்சியிலும் நடைபெற்ற கூட்டமைப்பின் மே தினப்பேரணிகளை அவர் தவிர்த்துக் கொண்டதும் தாயக உறவுகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது.

சுமந்திரன் கூட்டமைப்பை எங்கே இழுத்துச் செல்கிறார் என்ற சந்தேகம் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் அசாதாரண மௌனமே, சுமந்திரனை அவரது சுயவிருப்பத்துக்கு செயற்படவும், கூட்டமைப்பை உடைக்கும் வகையிலான கருத்துகளைக் கூறவும் வைக்கிறது போலும்!


No comments