சிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை! இராணுவத்திற்கு எதிராகப் பெண் சாட்சியம்!

“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன். எனினும் இளைஞர்கள் இருவரும் வெளியே வரவில்லை” என்று சிறுப்பிட்டி இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார்.

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் இராணுவத்தால் கடத்தப்பட்டு கொல்லப் பட்டனர். குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாண நீதிவான் மன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வந்தது.

மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகினர். 3ஆவது சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் உயிரிழந்துவிட்டார்.
வழக்குத் தொடுநர் தரப்பில் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் முன்னிலையானார்.

வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 14 சாட்சியங்களில் 7 சிவில் சாட்சிகளிடம் மன்றில் நேற்றுச் சாட்சியம் பெறப்பட்டது. அதன்போது பெண்ணொருவர் சாட்சியம் அளிக்கும்போது,

“இளைஞர்கள் இருவரும் சைக்கிளில் பயணித்த வேளை வழிமறித்த இராணுவத்தினர் அவர்களை சிறுப்பிட்டி படை முகாமுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு என்ன நடக்கின்றது என்று முகாமுக்கு அண்மையில் நின்று சிறிதுநேரம் அவதானித்தேன். அந்த இளைஞர்கள் இருவரும் முகாமுக்குள் இருந்து வெளியே வரவில்லை“ என்று அந்தப் பெண் சாட்சியமளித்தார்.

நேற்று 7 சாட்சியங்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. மீதி சிவில் மற்றும் பொலிஸ் சாட்சியங்கள் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி பதியப்படும் என்று தெரிவித்த நீதிவான் வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 1996ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டிருந்த இராணுவப் பொலிஸார் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் சங்கிலி மற்றும் கைக்கடிகாரம் என்பவற்றை முகாமுக்குள் இருந்து மீட்டிருந்தனர். அத்துடன் இளைஞர்களின் துவிச்சக்கர வண்டிகளின் பாகங்களையும் இராணுவப் பொலிஸார் மீட்டிருந்தனர். அந்தச் சான்றுப் பொருள்கள் தற்போது இந்த வழக்குடன் சேர்க்கப்பட்டுள்ளன.

No comments