நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை – ஒஸ்ரின் பெர்னான்டோ


சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் இல்லை என்று சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடக்கம் மே 8ஆமு் நாள் வரை சிறிலங்கா நாடாளுமன்றத்தை முடக்கும் அரசிதழ் அறிவிப்பு சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்டது. இதுகுறித்து பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து வெளியிட்ட போதே ஒஸ்ரின் பெர்னான்டோ, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் நோக்கும் சிறிலங்கா அதிபருக்கு கிடையாது என்று கூறியுள்ளார். “1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 70 (3) பிரிவு, நாடாளுமன்றத்தை முடக்கி விட்டு, கலைப்பதற்கான அதிகாரத்தை சிறிலங்கா அதிபருக்கு வழங்கியுள்ளது. எனினும், அவ்வாறான நோக்கம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடையாது. இதற்கு முன்னரும் பதவியில் இருந்த அதிபர்களும் கூட பலமுறை நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர். அரசியலமைப்பின் 70 (1) பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தை முடக்கியுள்ள சிறிலஙகா அதிபர், நாடாளுமன்றக் கூட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நாளையும் அரசிதழில் வெளியிட்டுள்ளார்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments