விக்கினேஸ்வரன்-சம்பந்தன் பேச்சுக்கு மனோகணேசன் அழைப்பு!


அடுத்த முறையும் முதலமைச்சர் கதிரைக்கு சி.வி.விக்கினேஸ்வரன் பொருத்தமானவரா என்பது பற்றி இப்பொழுது கூறுவது பொருத்தமில்லை.ஆனாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் வடமாகாண முதலமைச்சரும் மனம் விட் டுப் பேச வேண்டுமென கூறியிருக்கும் அமைச்சர் மனோகணேசன் தமிழ் மக்களி ன் எதிர்கால நலன்களுக்காக இரு தலைவர்களும் இதனை செய்யவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.


சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.


யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரத்தை முன்னர் தபால் கட்டளை பொருளாதாரம் என கூறுவார்கள். ஆனால் இது இன்று உண்டியல் பொருளாதாரமாக மாறியுள்ளது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். அதற்காக இளைஞர்கள் மத்தியில் மன மாற்றம் உண்டாக வேண்டும்.


இங்குள்ள இளைஞர்களுடன் பேசியபோது அவர்களிடத்தில் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மை காணப்படுகின்றது. இந்த நிலையும் ஆபத்தான ஒன்றாகவே உள்ளது. யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரம் மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.



ஆனால் அந்த துறைகள் இந்த மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இந்த மாவட்டத்தில் சொல்லிக் கொள்ளும் அளவில் அபிவிருத்தி பணிகள் இடம்பெறவில்லை.



அபிவிருத்தியும் அரசியல் உரிமையும் நம் இரு கண்கள். அதனை எதற்காகவும் விட் டுக் கொடுக்கவியலாது. தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மாகாண சபையையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்தார்கள்.



ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இரா.சம்பந்தனும், சீ.வி.விக்னேஸ்வரனும் ஒருவரு க்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் முதலில் மனம் விட்டுப்பேசவேண்டும். இந்த இருவரில் அவர் சரியானவர், இவர் பிழையானவர் என நான் கூறவரவில்லை.


இருவருமே மனம் விட்டுப்பேசி தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படவேண்டும்.  மேலும் தந்தை செல்வா போன்றவர்கள் அகிம்சை வழியில் போராடினார்கள். பின்ன ர் புலிகள் ஆயுத வழியில் போராடினார்கள். இப்போது சம்மந்தன் சர்வதேச ஆதரவுன் போராடி வருகிறார்.



அதேசமயம் நான் தமிழ் மக்களின் அபிலாசைகளை சிங்கள மக்களிடம் கொண்டு செல்கிறேன். இந்த அரசாங்கம் புலிகள் இருந்த காலத்தில் ஈழம் தவிர எல்லாம் தருகிறோம் என்றார்கள். இன்று எதுவும் தரமாட்டோம் என்கிறார்கள். ஆகவேதான் நண்பன் ரவிராஜ் வழியில் இதனை நான் செய்கிறேன் என்றார்.

No comments