இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடாத்தினால் மீண்டும் சிரியாவைத் தாக்குவோம்


சிரியா ஜனாதிபதி பஷீர் அல் அஸாதின் அரசாங்கம் மீண்டும் ஒரு முறை அந்நாட்டின் சிவில் மக்கள் மீது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடாத்தினால் மீண்டும் சிரியாவைத் தாக்குவோம் என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிகி ஹேலி ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அறிவித்தல் விடுத்துள்ளார். அமெரிக்காவின் தலைமையிலான மேற்கு நாடுகளின் கூட்டுப்படை டமஸ்கஸ் நகரிலுள்ள இரசாயன ஆயுத தளங்களை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல் என்பவற்றை மேற்கொண்டது. இதனையடுத்து சிரியா அரசாங்கத்தின் நட்பு நாடான ரஷ்யா, ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையை உடன் கூட்டுமாறு நேற்று (14) அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தது. இதனையடுத்து நேற்று (14) கூட்டப்பட்ட பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமெரிக்க தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலம் சிரியாவின் இரசாயன ஆயுத நடவடிக்கைகள் பலவீனப்படுத்தப்பட்டதாகவே தாம் கருதுகின்றோம். நாம் இந்த அழுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவோம் எனவும் நிகி ஹேலி கூறியுள்ளார். சிரியாவின் அரசாங்க படையினர் எமது சக்தியையும் பலத்தையும் விளங்கிக் கொள்வதில் முட்டாள்களாக இருக்குமாயின், நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை விடவும் கூடிய அழுத்தத்தை வழங்க நாம் தயாராகவுள்ளோம் எனவும் நிகி ஹேலி சுட்டிக்காட்டியுள்ளார். சிரியா அரசாங்க படை மீண்டும் ஒரு முறை இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அமெரிக்கா உடன் தாக்குதலை நடாத்தும் எனவும் நிகி ஹேலி பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் மேலும் அறிவித்துள்ளார்.

No comments