வலி. வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை மீள பெறுங்கள்


யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் உள்ள காணிகளை சுவீகரிப்பதாக கடந்த 2013 ஆம் ஆண்டு மஹிந்த அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் என காணியை இழந்த மக்கள் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் ஜான்சன் பிரிடாரோ கோரியுள்ளார்.

யாழ் வலி வடக்கு மயிலிட்டி பகுதியில் 20 ஆவது வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற நில மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்க்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில் 

வலி. வடக்கு மக்களின் சுமார் 6317 ஏக்கர் காணிகளை மஹிந்த அரசாங்கம் கையகப்படுத்தி வர்த்தமானி வெளியிட்டது.

இந்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் , மக்களின் காணிகளை விடுவிப்பதாகவும் கூறி ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசாங்கம்  குறித்த வர்த்தமானியை நீக்காமல் கடந்த கால அரசாங்கங்கள் போல  மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளது.

அவ்வாறான நிலையிலையே வலி வடக்கு பகுதியில் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி , பலாலி மற்றும் வசாவிளான் ஆகிய மூன்று இடங்களில் போராட்டங்கள் இடம் பெற்று வருகிறது.

இந்த அரசாங்கம் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம் என ஆட்சிக்கு வந்து எதிர்வரும் வாரத்துடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றது. 

புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் குறிப்பாக  காணி இழந்த மக்கள் நம்பிக்கை வைத்த போதும் தற்போது  நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றனர்.

எனவே இந்த அரசாங்கமாவது , வர்த்தமானியை மீள பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

No comments