யோஷித ராஜபக்ஷ கைது!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரும், கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்றைய தினம்  வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலுவையிலுள்ள நிதி மோசடி மற்றும் சொத்துக் குவிப்பு தொடர்பான விசேட விசாரணை ஒன்றின் கீழ், அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகவே லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னதாக 'சிஎஸ்என்' (CSN) தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் நிதிப் பயன்பாடு மற்றும் சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு தொடர்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. 

இது தொடர்பான விசேட விசாரணைகள் நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்ற பின்னணியில், இன்றைய தினமும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரிடம் பல மணிநேரம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதோடு, அவரைக் கைது செய்துள்ளனர். 

இவ்விசாரணையின் மேலதிக அறிக்கைகள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் இலங்கை கடற்படையில் எவ்வாறு சேர்ந்தார் மற்றும் பிரிட்டிஷ் அரச கடற்படைக் கல்லூரியில் எவ்வாறு சேர்ந்தார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடத்தும் விசாரணையின் தொடர்பில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது . நேற்று (16) அவர் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தபோதிலும், பணச்சலவை தொடர்பான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதால், தன்னால் ஆஜராக இயலாது என்று அவர் கடிதம் மூலம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

No comments