தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர் 10 வருடங்களாக கடற்கொள்ளையில் ஈடுபடுபவர் - ஊரவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.


தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு , தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் கடற்கொள்ளையர் எனவும், குறித்த நபருடன் இணைந்து சிலர் கடந்த 10 வருடங்களாக கடற்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என பலாலி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை குறித்த கடற்கொள்ளை கும்பலுக்கு எதிராக பொலிஸார் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு , பலாலி பொலிசாரிடம் தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலாலி பகுதியை சேர்ந்த நபரை தமிழக கடற்தொழிலாளர்கள் தமிழகத்திற்கு கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன. 

இந்நிலையில், பலாலி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் , தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடித்து செல்லப்பட்ட நபர் கடற்தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவர் ஆயினும் , அவர் கடற்தொழிலில் ஈடுபடுவதை விட கடற்கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர் எனவும் , அவரால் பல உள்ளூர் தொழிலாளிகள் கடற்தொழில் உபகரணங்களை இழந்து பல இலட்ச ரூபாய் நஷ்டங்களையும் எதிர்கொண்டு இருந்தனர். என சில ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். 

அதனை அடுத்து, தலைவருக்கு குறித்த நபரின் குடும்பத்தினரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தன  இந்நிலையில் பலாலி கடற்தொழிலாளர் சங்க அவரச பொதுக்கூட்டம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சங்க மண்டபத்தில் நடைபெற்றது. 

கூட்டத்தில், பலாலியில் உள்ள கடற்தொழில் சமூகத்தை சேர்ந்த ஓரிரு குடும்பங்கள் , கடற்தொழிலில் ஈடுபடாது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைபிடிக்கப்பட்ட நபர் சுமார் 10 வருட காலமாக கும்பலாக சேர்ந்து கடற்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றார். அதற்கு அவரது குடும்ப மற்றும் சில உறவினர்கள் ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்

அவர்களால் உள்ளூர் கடற்தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வந்தனர். அவர்களுக்கு எதிராக பலாலி பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் உள்ளன. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டும் உள்ளன.  இவ்வாறான நிலையிலையே , சில காலமாக தமிழக கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து அவர்களின் கடற்தொழில் உபகரணங்களை கொள்ளையடித்து வந்துள்ளனர்.

அவ்வாறு இம்முறை கொள்ளையடிக்க சென்ற வேளையே ஒருவர் தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டார். 

இவ்வாறானவர்களால் இரு நாட்டு கடற்தொழிலாளர்கள் மத்தியில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதுடன் , இரு தரப்பினரும் இடையிலான நல்லுறவுகளும் பாதிக்கப்படுகின்றன. நாட்டிற்கும் அபகீர்த்தி ஏற்படுகிறது. 

எனவே இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு , அதை நடைமுறைப்படுத்துமாறு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தீர்மானத்தின் பிரதியுடன்,  கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் பிரதிகளை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , கடற்தொழில் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் மற்றும் கிராம சேவையாளர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments