தந்தை செல்வாவின் நினைவுகூரலுக்கு கோட்டபாயவையும் அழைக்க போகிறார்களா ? விமலேஸ்வரி கேள்வி


தந்தை செல்வாவின் 49 ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை அழைத்து சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்திருக்கின்றார்கள். அவர்கள் இனிவருங்காலத்தில் தந்தை செல்வாவின் நினைவு கூரல் நிகழ்வுகளுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவும் கோட்டபய ராஜபசக்சவும் கூட அழைத்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை என ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு கூரல் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமஸ்டி தொடர்பில் உரையாற்றி இருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தந்தை செல்வாவின் நினைவு நாளுக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் சிலர் விசனம் தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை நடத்திய ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

தந்தை செல்வாவின் நினைவு கூரல் நிகழ்வில் தொடர்ந்து பல வருடங்களாக் கலந்துகொண்டு வருகின்றேன். அதேநேரம் தந்தை செல்வாவுக்காக தமதிழ் தரப்பிலுள்ள அனைத்து கட்சியினரும் இதில் கலந்துகொள்வதும் வழக்கம்.

ஆனால் இம்முறை ஒரு வினோதம் நடந்துள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துகொண்டு சமஸ்டி தொடர்பில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். 

ஜீ.எல்.பீரிஸை அனைவருக்கும் நன்கு தெரியும். இவர் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதான பேச்சுவாத்தைகளில் அதிகம் கலந்துகொண்ட ஒருவர். அத்தனை பேச்சுவார்த்தையையும் வெற்றிகரமாக முடிறியடித்தவர் . ஒரு சமயம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூட பேச்சுக்களின் போது சிலவற்றை அனுசரித்து போகலாம் என்று கூறியிருந்த நிலையில் அவ்வாறு செல்லக் கூடாது என்று கூறி விட்டக்கொடுப்பில்லாது சமாதான பேச்சுக்களை குழப்பியவர் 

அம்மணாமாக நின்றாலும் அரசியல் செய்வோம் என்று திரியும் எமது அரசியல்வாதிகளுக்கு இவர் இன்று சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுக்க அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

அடுத்த நினைவு நாளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை  பயங்கரவாத ஒழிப்பு, வடக்கு கிழக்கு பிரிப்பு, அதனூடாக ஒற்றை ஆட்சியின் அவசியம் தொடர்பில் கருத்துரைக்க அழைப்பார்கள் போல் உள்ளது.

 51 ஆவது நினைவு கூரலுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபயவை அழைத்து முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் பற்றிய வழிமுறை ஒன்றை பேச வைக்கலாம். 

உண்மையில் இன்று தமிழ் தேசியம் என்று கூறும் அரசியல் பரப்பில் இருக்கும் எந்த ஒருவருக்கும் தமிழ் மக்கள் கொடுத்த விலைகள் ஞாபகத்தில் இல்லை. 

ஏனென்றால் இன்று தமிழ் அரசியல் பரப்பில் இருப்பவர்கள் எவரும் அதில் விலை கொடுக்காதவர்கள். தங்களுடைய பிள்ளைகளை உறவுகளை இழந்த வலி தெரியாதவர்கள். இதனால்தான் மக்களில் உணர்வுகள் அவர்களுக்கு ஞாபகம் வருவதில்லை. 

தமிழ் மக்களை எவ்வாறெல்லாம் பிளவுபடுத்தலாம் அவர்களது வரலாறுகளை எல்லாம் எவ்வாறு சிதைவுறுத்தலாம் என்பதையே இலக்காக கொண்டே இந்த அம்மண அரசியல்வாதிகளால் இன்று தமிழ் தேசியம் நகர்த்திச் செல்லப்படுகின்றது. 

அதற்கும் ஒரு படி மேலாக தமிழ் தேசியம் என்று பேசியவர்கள் இன்று கூட்டாட்சிக்கு போய்விட்டார்கள். ஏன் இதைத்தானே டக்ளஸ் தேவானந்தா மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கூறிவந்திருக்கின்றார்.

அவர் அவ்வாறு கூறியபோதெல்லாம் நீங்கள் நக்கலடித்துக்கொண்டு திரிந்தீர்கள். ஆனால் இன்று அவர் கூறிய இடத்துக்கே சென்றிநிற்கின்றீர்கள். 

இன்று கூட்டாட்சிக்கு சென்றுள்ள நீங்க ஒவ்வொருவரும் மத்தியில் கூட்டாட்சி எப்படி? மாநிலத்தில் சுயாட்சி எப்படி ? என டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து விரிவுரை நடத்துங்கள் என மேலும் தெரிவித்தார்.

No comments