அதிகாரிகள் யாருடைய அடிமைகள்!
சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவிருந்த தினத்தில், சர்ச்சைக்குரிய குருந்தூர் மலை விகாராதிபதி வருகை தந்திருந்தமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது , கருத்து வெளியிட்ட காணி உரிமையாளர்கள், சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்களை அழைப்பதில்லை. அங்கே என்ன கதைத்தார்கள் என சொல்வதில்லை.
கடந்த 11ஆம் திகதி காணி அளவீடு செய்ய போவதாக மாவட்ட செயலகத்திற்கு எம்மை அழைத்து கூட்டம் நடத்தினார்கள். அந்த அறிக்கையை கேட்டால், அது கூட்டமில்லை கலந்துரையாடல் அதுக்கு அறிக்கை எழுதவில்லை என்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் நடந்த கூட்டத்தையே கூட்டம் இல்லை என்கின்றனர்.
காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க இருந்த அன்றைய தினம் விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதி காணப்பட்டார். அவர் ஏன் அங்கே வந்தவர் ? அவர் எப்படிப்பட்டவர் என எல்லோருக்கும் தெரியும்.
நாம் கொழுபில் இருந்து வந்த திணைக்கள அதிகாரிகளிடம் உறுதி மொழி கேட்கவில்லை. அவர்களை யார் என்றே எமக்கு தெரியாது. நாம் எமது மாவட்ட செயலரோ அல்லது தெல்லிப்பளை பிரதேச செயலரோ தமது அலுவலக கடித தலைப்பில் அதனை எழுதி தர சொல்லியே கேட்டோம். அதற்கு அவர்கள் சம்மதிக்க வில்லை எனில் , அவர்களுக்கே காணிகளை அளந்த பிறகு என்ன நடக்கும் என தெரியாது என்பதால் தான் அவர்கள் அவ்வாறு தர மறுத்தனர்.
அன்றைக்கு அவர்கள் எங்களுக்கு கடித தலைபின்றி தந்த கடிதம் உத்தியோகபூர்வ கடிதமாக எந்த திணைக்கள கோவைக்குள்ளும் இருக்காது. அந்த கடிதம் எம்மிடம் மட்டுமே இருக்கும். அரச ஆவணமாக திணைகள கோவைகளுக்குள் அந்த கடிதம் இருக்காது.
அதனால் தான் நாம் கடித தலைப்பில் கடிதம் கேட்டோம். அவ்வாறு தந்தால் தான் அதொரு ஆவணமாக கோவைக்குள் இருக்கும். அவ்வாறான கடிதமே சட்ட ரீதியான ஆவணமாக இருக்கும்” என காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment