யேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் கைது!


போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒமன், மஸ்கட் வழியாக யேர்மனிக்கு  தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை  (16) கைது செய்யப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி, முள்ளங்காவிலில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரான இளைஞன் இன்று அதிகாலை 05.20 மணியளவில் ஓமன், மஸ்கட் நோக்கி புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் தனது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். 

இளைஞன் சமர்ப்பித்த கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், அனைத்து ஆவணங்களையும்  கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி பரிசோதித்ததில் கடவுச்சீட்டு போலியானது என்றும் தெரியவந்துள்ளது.

விசாரணைகளில், குறித்த இளைஞன் ஒரு தரகருக்கு ரூ. 3 மில்லியன் கொடுத்து போலியான பிரான்ஸ் கடவுச்சீட்டை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments