மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம் - உதவிக்கு சென்ற முதியவர்கள் மீது சித்திரவதை


யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து அட்டகாசம் புரிந்த வன்முறை கும்பலிடம் இருந்து இளம் தாயையும் குழந்தையையும் மீட்க சென்ற முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 

மண்டைதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றின் , கணவர் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற நிலையில் , மனைவியும் அவர்களது சிறு குழந்தையும் வீட்டில் தனியாக இருந்த போது  நள்ளிரவு வேளை மூவர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

வீட்டில் இருந்த பெண் , அபயக்குரல் எழுப்பிய வேளை உதவிக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் முதியவரும் , மற்றுமொரு வீட்டில் வசிக்கும் வயோதிப தம்பதிகளும் விரைந்துள்ளனர். 

அதன் போது முதியவர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்ட போது , அவரது கை விரல் ஒன்று துண்டாட்டப்பட்டுள்ளது. அத்துடன் வயோதிப தம்பதியினரில் முதியவர் மீது தாக்குதல் மேற்கொண்டு , தம்பதியினரை முழங்காலில் இருந்தியுள்ளனர். 

வீட்டினுள் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நின்று அட்டகாசம் புரிந்த பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. 

தாக்குதலில் காயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,  சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் மண்டைதீவு சந்தியில் பொலிஸ் கடற்படை இணைந்து கடமையில் நிற்கும் நிலையில் மண்டைதீவுக்குள் இவ்வாறான வன்முறை சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றன. 

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , வன்முறைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ,வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாதை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments