கதிரைக்குத்துப்பாடு உச்சம்?
யாழ்.மாவட்டத்திலுள்ள சபைகளில் யாழ்.மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபைகளை தமிழரசுக்கட்சியானது ஈபிடிபி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சகிதம் கைப்பற்றிக்கொண்டுள்ளது.அதேவேளை தமிழ் தேசிய பேரவை சாவகச்சேரி நகரசபையினை மயிரிழையில் தக்க வைத்துள்ளது.
முன்னதாக யாழ்.மாநகரசபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி முதல்வராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
யாழ். மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் (13) யாழ். மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றிருந்தது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக விவேகானந்தராசா மதிவதனியும் தமிழ் தேசிய பேரவையின் முதல்வர் வேட்பாளராக கனகையா சிறீகிருஸ்ணகுமாரும் களமிறங்கியிருந்தனர்.பரவலாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடுநிலமை வகித்திருந்தனர்.
வெளிப்படையான வாக்கெடுப்பில் விவேகானந்தராஜா மதிவதனிக்கு 19 வாக்குகளும் கனகையா சிறீகிருஸ்ணகுமாருக்கு 16 வாக்குகளும் கிடைத்திருந்தன. தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்து வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட விவேகானந்தராஜா மதிவதனி வெற்றி பெற்றதுடன்இ பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் தெரிவானார்.
அதேவேளை நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக மணிவண்ணன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த ப.மயூரனும் உப தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த இ.ஜெயகரனும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சிக்கிடையிலான கூட்டின் பிரகாரம் மயூரன் மீண்டும் தவிசாளராகியுள்ளார்.
அதேவேளை சாவகச்சேரி நகரசபை தவிசாளராக போட்டியிட்ட இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் வேட்பாளர்கள் தலா 7வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு முறையின் மூலம் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளராக போட்டியிட்ட தமிழரசு மற்றும் தமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் தலா 7வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு முறையின் மூலம் முன்னாள் உறுப்பினர் ஞா.கிசோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment