மன்னாரில் 9 கோடியே 30 இலட்சம் ரூபா சொத்துக்கள் முடக்கம்


சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில்,  சந்தேக  நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை முடக்கப்பட்டுள்ளது

மன்னார் தலைமன்னார் பகுதியை சேர்ந்த 43 வயதான நபர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு வீடுகள், சொகுசு வாகனம் உள்ளடங்களாக 9 கோடியே  30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களே மேற்படி  நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் 2002 ஆம் ஆண்டு அரச வீட்டுத்திட்டம் ஒன்றை பெற்று, இரண்டு படகுகளை வைத்து சாதாரண குடும்பமாக வாழ்ந்து  வந்த நிலையில், 2019 பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பல கோடி சொத்துக்களை சேர்த்துள்ளார்.

அதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் இயங்கும் சொத்து முடக்கள் பிரிவினர் கடந்த இரண்டு வருடங்களாக  மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இன்று நீதிமன்ற அனுமதியை பெற்று,  இன்றிலிருந்து 7 தினங்களுக்கு சந்தேக நபரின் சின்னக்கடையில் காணப்படும் கடைதொகுதியுடன் கூடிய வீடு ஒன்றும் தலைமன்னார் பகுதியில் உள்ள விசாலமான வீடு, சொகுசு வாகனம் ஒன்று முடக்கப்பட்டுள்ளது

அதே நேரம் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இதனை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சொத்துக்களை அரசுடமையாக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கில் சட்ட விரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என்பதுடன், இது போன்று சட்டவிரோதமாக சொத்துக்கள் ஈட்டிய பல்வேறு நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments