தெஹிவளையில் பெண் சட்டத்தரணி படுகொலை செய்து உடைமைகள் கொள்ளை


வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் சட்டத்தரணி ஒருவரை படுக்கையறையில் வைத்து, படுகொலை செய்து சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹிவளை, களுபோவில வீதியில் வசித்து வந்த 64 வயதுடைய சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சட்டத்தரணி, குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், அவரது சகோதரர் கனடாவில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரும் தொலைபேசியில் பேசி வந்துள்ள நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் பெண் சட்டத்தரணியை கனடாவில் உள்ள சகோதரன் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ​​முன்பக்க  வாயில்  பூட்டப்பட்டிருந்துள்ளது.

வீட்டின் பின்பக்கம் சென்று பாரத்த போது சமையல் அறை கதவு பாதி திறந்திருந்ததாகவும் அதன் ஊடாக உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் பொருட்கள் சிதறி காணப்பட்டுள்ளது. 

வீட்டின் வரவேற்பறையை ஒட்டிய அறையில் சட்டத்தரணியின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் மின்சாரத்தை துண்டித்து கட்டிலில் வைத்து சட்டத்தரணியை கொலை செய்து உடலை துணியால் மூடி தீ வைத்து கொளுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. 

இக்கொலை எப்போது நடந்தது என்று சரியாக கூற முடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பதில் நீதவான் ரத்ன கமகே, முதற்கட்ட நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

No comments