யாழில் இளைஞனை தாக்கி கொள்ளை - மூன்று பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மறியலில்


இளைஞனைத் தாக்கி பணம் , உள்ளிட்ட 10 லட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி குறித்த சந்தேகநபர்கள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இளைஞன் ஒருவரை மறவன்புலவு பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.

அங்கு இளைஞனைத் தாக்கி அவரிடமிருந்த நாலரைப் பவுண் தங்க நகைகள், இரண்டு கையடக்க தொலைபேசிகள், கைக்கடிகாரம் மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

அதன்பெறுமதி 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில்  பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சிலாபத்தைச் சேர்ந்த 3 பெண்களும், கனகராயன்குளத்தை சேர்ந்த இரு ஆண்களுமாக ஐவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நகைகளை கொள்வனவு செய்த  வவுனியாவைச் சேர்ந்த கடை உரிமையாளர் அவற்றை உருக்கி தங்க தட்டுகளாக மாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் ஆறு சந்தேகநபர்களையும்,  சாவகச்சேரி நீதிமன்றில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்படுத்திய போது அவர்களை 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




No comments