பாலஸ்தீனியர்கள் எங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்


இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப்  போர் இடம்பெற்று வரும் நிலையில் உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும்இ பாலஸ்தீனியர்கள் எங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்  எனவும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நேற்றைய தினம் நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

 ‘பாலஸ்தீன – இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு  பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற  யதார்த்தினை 1978 ஆம் ஆண்டு அங்கு பயிற்சிக்கு சென்ற போதே என்னால் உணர முடிந்தது.

பாலஸ்தீன மக்களின் உணர்வுகளையும் ஆழ்மன விருப்பங்களையும் நான் நேரில் கண்டிருக்கின்றேன். அங்கு நான் ஆயுதப்பயிற்சி எடுத்த வேளை அவர்களது போராட்டத்தில் கூட பங்கெடுத்திருக்கிறேன்.

எமது மண்ணிலும் நானிருந்த எமது அன்றைய ஈ பி ஆர் எல் எவ் அமைப்பே கண்காட்சிகளை நடத்தி

பாலஸ்தீன விடுதலைக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்திருந்தது.

போர் வெறியர்களாக அவர்கள் போராட புறப்பட்டவர்கள் அல்ல. ‘ஒரு கையில் ஒலிவ மரக்கிளையும் மறு கையில் ஆயுதமும் ஏந்தியுள்ளோம், எது வேண்டும் என்று யசீர் அரபாத் எழுப்பிய கேள்வி சகலரையும் ஈர்த்திருந்தது’ ஒலிவமரக்கிளை அங்கு சமாதானத்தின் சின்னம்.

அத்தகைய வழிமுறையே சிறந்ததென நானும் கருதியவன். ஆனாலும் அன்றே நான் நினைத்திருந்தேன் அவர்களது பயணத்திலும் மாற்றங்கள் தேவையென்று. பாலஸ்தீனத்தை பாடமாக ஏற்று எமது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் அன்று கருதியதுண்டு.

பாலஸ்தீன மக்களும் இன்று எமது போராட்ட படிப்பினைகளை வைத்துபயணிக்க வேண்டும். போர் மேகங்கள் அங்கு சூழ்ந்துள்ளன.

எந்த தரப்பும் பொது மக்களை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும். இதே வேளை பாலஸ்தீன மக்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். நிரந்தர சமாதானம் அங்கு நிலவ வேண்டும்.

மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமென்ற உரிமம் பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல எங்கும் நிலவ வேண்டும்’  இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

No comments