ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு!


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்றது.

சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான எஸ். கியூ. 469 என்ற விமானம் மூலம் இன்றைய தினம் அதிகாலை 12.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்புக்கான சிரேஸ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்த்தன, ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்களுக்கான விசேட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க உள்ளிட்ட 10 கொண்ட தூதுக் குழுவினரும் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பை (Halimah Yacob) சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் , சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங் (Lee Hsien Loong), சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் ஹெங் ஹென் (Ng Eng Hen), நிலைபேறு மற்றும் சுற்றாடல் அமைச்சர் கிரேஸ் பூ ஹாய் இயன் (Grace FU Hai yien) ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

பெரிஸ் உடன்படிக்கையின் 6 ஆவது உறுப்புரை, சர்வதேச கார்பன் வர்த்தகத்தின் கீழ் பசுமை வீட்டு வாயு வெளியேற்றத்தை மட்டுப்படுத்தும் நோக்கத்துடன் குறைந்த செலவில் ஒத்துழைப்புக்களை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் பெரிஸ் உடன்படிக்கைக்கு அமைவாக கார்பன் சீர்ப்படுத்தல் தொடர்பாக இலங்கை மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஜனாதிபதி வெளிநாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களை கண்காணிப்பதற்காக பதில் அமைச்சர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இன்று மற்றும் நாளைய தினங்களில் அமுலாகும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராகவும், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவல், சிறுவர் , மகளிர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments