யாழ்.பண்ணை நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை!


யாழ்ப்பாணம் பண்ணை சுற்று வட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அவ்விடத்தில் இருந்து அகற்ற யாழ்.நீதவான் நீதிமன்று ஊடாக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 யாழ்.பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் ஊர்காவற்றுறை வீதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டத்திற்கு புறம்பாக இனந்தெரியாத நபர்கள் மூலம் பார்வதி அம்மன் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

 இதன் காரணமாக எதிர்காலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் இன, மத, சமூக உடன்பாடுகளுக்கு விளைவுகள் ஏற்படும் நிலை உருவாகி சமாதான சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே  சிலையினை அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி சபையின் அதிகாரிக்கு கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றில் கோரியுள்ளனர். 

அதனை மன்று ஏற்று , இந்தச் சிலையினை உரிய அனுமதிபெற்று அமைத்து இருப்பின் அவ் அனுமதியுடன் அல்லது உருவாக்கிய நபர்கள் யாரேனும் இருந்தால் அல்லது இந்தச் சிலையினை உரிமை கோரும் யாராவது இருந்தால் 18.04.2023ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு சமூகமளித்து உரிமை கோருமாறும் மன்று கட்டளையிடுவதுடன் இதன் உரிமை கோருவதற்கு தவறும் பட்சத்தில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இந்தச் சிலை அகற்றப்படும் என அறிவித்தல் விடுத்துள்ளது. 

குறித்த நீதிமன்ற அறிவித்தல் , பண்ணையில் அம்மன் சிலை அமைந்துள்ள பகுதியில் பொலிஸாரினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை குறித்த அம்மன் சிலைக்கு கடந்த புதுவருடத்தன்று பாலபிஷேகம் செய்த உருத்திர சேனா அமைப்பினரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 



No comments