அரச ஊழியளிற்கு:கோவிந்தா! கோவிந்தா!!



சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் தேர்தல்கள் முடிந்த பின்னரே பணிக்கு திரும்பலாம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் வரை சேவையில் ஈடுபட முடியாது.

தேர்தல் நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் தான் அவர்கள் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தார்கள்.  தேர்தல் இல்லை என்று குறிப்பிடவில்லை, தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச சேவையாளர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் அவர்கள் மூன்று மாத காலம் சம்பளமில்லாத விடுமுறை என்ற அடிப்படையில் சேவையில் இருந்து இடை விலக வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

தவிர்க்க முடியாத காரணிகளினால் எதிர்வரும் மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் தற்போது பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.

தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் வரை அரச சேவையில் ஈடுபட முடியாது.

தேர்தல் நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் தான் அவர்கள் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இல்லை என்று குறிப்பிடவில்லை. தவிர்க்க முடியாத காரணங்களினால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி அறிவிப்படும் என்றார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை காணப்படும் நிலையில் சம்பளம் இல்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பிரதமரிடம் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments