அடுத்தது?:மாடு மேய்க்க தயாராகும் ராஜபக்சக்கள்!



அடுத்த வருடத்திற்குள் 5000 கறவை மாடுகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திரவ பாலை பிரபலப்படுத்தும் வகையில் பாரியளவிலான பால் பண்ணைகளை நிறுவுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி காரணமாக பால்மா இறக்குமதி குறைவடைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே 400 கிராம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை தற்போது 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதுவரையில் 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மாவின் புதிய விலை 790 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 600 ரூபாவால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கமைய தற்போது இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா ஆயிரத்து 945 ரூபா என விலையிடப்பட்டுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் பால்மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் உற்பத்திக்கு தேவையான அளவு இறக்குமதி இல்லாத பிரச்சினையை பால்மா உற்பத்தி நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ளன.

தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு பணியாளர்களும் தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments