ஓடு ஓடு:போட்டோ போட அறிக்கை விட ஓடு!

 


தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி ஊடகங்களில் வெளியானதும் அதனை தேடுவதும் பின்னர் அறிக்கைவிட்டு அரசியல் செய்வதும் தமிழ் தேசியப்பரப்பில் சலித்துப்போன காட்சிகளாக மாறிவருகின்றது.

அது நிலப்பிடிப்பாயினும் சரி கடல் பிடிப்பாயினும் சரி கண்மூடியிருக்கும் தமிழ் தலைவர்கள் ஊடகங்களில் பேசுபொருளானால் ஓடோடி வருவதும் அவர்கள் பின்னால் கமராவுடன் தொலைக்காட்சிகள் திரிவதும் அண்மைய காட்சிகளே.

பூநகரி - கௌதாரிமுனை பகுதியில். சீன நிறுவனமொன்றால் முன்னெடுக்கப்பட்டு வரும் அட்டை வளர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காகவென நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் இடம் தேடி அலைந்த பரிதாபம் நேற்று (28) நடந்திருந்தது.

தமது படையணி சகிதம் சென்றிருந்த இருவரும் சீன களங்கட்டிய கடலை தேடி அலைந்து கடைசியில் ஊடகங்களின் காலில் வீழ்ந்து இடத்தை கண்டுபிடித்த பரிதாபம் நடந்திருந்தது. 

இது தொடர்பில், கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், குறித்த அமைவிடம் மக்களுக்கு தெரியாத வகையில் மறைவிடமாக அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

குறித்த நிறுவனத்தினர், அரியாலையில் அவர்களது அலுவலகத்தை வைத்துள்ளனர் என்று தெரிவித்த அவர்,  கடல் தொழில் அமைச்சால், இந்த நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சட்டவிரோதமாக இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு, ஒருவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு அப்பால், இந்த நாட்டில், சீன ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சியாகவே, இந்தச் செயற்பாட்டை தாங்கள் பார்ப்பதாகவும், சுமந்திரன் எம்.பி கூறினார்.





No comments