இந்தியா கவனம்?



இலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அச்சப்படத் தேவையில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசர தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியில் சீனாவின் தலையீடுகள் உள்ள காரணத்தால் இந்தியாவை ஓரங்கட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதாவென்ற கேள்விக்கு பதிலளித்து அவர் அவ்வாறு எந்தவொரு நாட்டினதும் நேரடி அரசியல் தலையீடுகள் எமக்கில்லை, சீனாவுடன் நாம் நல்லதொரு நட்புறவில் உள்ளோம் என்பதற்காக இந்தியாவுடன் நட்புறவை நாம் முறித்துக்கொள்ளவில்லை.

அவர்களுடனும் வர்த்தக, கலாசார ரீதியிலான உறவு கையாளப்படுகின்றது.

ஆனால், இந்தியா இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட முயற்சிகள் எடுத்தால் அதுவே உறவை முறிக்கவும் காரணமாக அமைந்துவிடும்.

அதுமட்டுமல்ல இலங்கை – இந்திய உறவு 13 ஆம் திருத்தத்தில் தங்கியிருக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் நாட்டுக்கு உகந்த, இலங்கையால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்பட முடியும்.


கேள்வி:- வடக்கில் மின்சக்தி அபிவிருத்தித் திட்டத்தை சீனாவுக்கு கொடுத்தமை இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு பிரச்னையாகும் என்று கூறப்படுகின்றதே?


பதில்:- வெறுமனே தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாட்டின் அபிவிருத்தியை கைவிட முடியாது. நாட்டுக்கு அபிவிருத்தி அவசியமானது.


பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் இவ்வாறான தீர்மானங்களை நாம் முன்னெடுத்தாக வேண்டும். இலங்கையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மட்டுமே சீனா முன்னெடுக்கின்றது.


மாறாக அவர்களின் இராணுவம் இங்கு குவிக்கப்படவில்லை. இலங்கையின் கடல் எல்லை பாதுகாப்பு எப்போதுமே இலங்கை வசமே இருக்கும்.


அம்பாந்தோட்டையாக இருந்தாலும், யாழ்ப்பாணமாக இருந்தாலும் கடல் எல்லையை இலங்கைக் கடற்படையே பாதுகாக்கும்.


இதில் இந்தியா அச்சமடைய வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை. சீனாவால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சறுத்தல் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.

No comments