மீண்டும் புலனாய்வு பிரிவின் சித்திரவதைகள்!


வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுப் பிற்பகல் வேளை வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞனை மறித்த புலனாய்வாளர்கள் எங்கே சென்று வருகிறாய் என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த இளைஞன் இது வீதி. இதனால் போய்வர முடியாதா? எனக் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த இளைஞனை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து வெற்றிலைக்கேணி மயானப் பகுதியில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தனது மகனை புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றதை கேள்வியுற்ற தாயார் மயானப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற தாயை கண்டதும் மகன் விம்மி விம்மி அழுதுள்ளார். ஏன் எனது மகனை அடித்தீர்கள் என புலனாய்வாளர்களை கேட்டதற்கு இல்லை தாங்கள் அடிக்கவில்லை என கூறியுள்ளனர்.

தொடர்ந்து மகனை அழைத்துச் சென்ற தாயார் அவரை யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார்.

அவர் தற்போது யாழ். போதனா மருத்துவமனை 24 ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments