திட்டமிட்டு யானைகள் இறக்கப்படுகின்றனவா?



சங்கிலிகள் கட்டப்பட்ட வளர்ப்பு யானைகளை மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் திட்டமிட்டு கொண்டு வந்து விடப்படுகின்றதா சிறீதரன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெளிகரை செம்மங்குன்று பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானைகள் மக்களின் குடியிருப்புகளில் புகுந்து அவர்களின் வாழ்வாதார பயிரான தென்னை மரங்களை சேதப்படுத்தியது.



குறித்த விடயம் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடுவதற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர்கள்  அத்துடன் பூநகரி பிரதேச சபை உறுப்பினர்கள் குறித்த பகுதிகளுக்கு இன்றைய தினம் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு  சேதங்கள் தொடர்பாக தகவல்களை பெற்றுக் கொண்டனர் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

சங்குபிட்டி பாலத்தின் ஊடாக பூநகரியால் மன்னார் செல்லும் பாதையில் அமைந்துள்ள செம்மங்குன்று கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்து பயன் தரும் தென்னை மரங்களை அழித்துள்ளது.

இவ்வாறு குறித்த பகுதிக்கு 7 யானைகள் வந்ததாகவும் அவ்வாறு வருகை தந்த யானைகளில் இரண்டு  யானைகளின் கால்களில் சங்கிலிகள் கட்டப்பட்டு இருந்ததாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்படி என்றால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு வளர்ப்பு யானைகள் கொண்டு வந்து விடப்பட்டதாகவே மக்கள் அஞ்சுகிறார்கள். என தெரிவித்ததுடன்.

குறித்த பகுதியில் கிட்டத்தட்ட பயன் தரும் 70 மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன என்றும் குறித்த  சேத விவரங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


No comments