இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் மலேசியாவிலிருந்து நாடுகடத்தல்

கொரோனா பரவல் காரணமாக, மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மார்ச் 18 முதல் ஜூலை 1 இடையிலான காலக்கட்டத்தில் 5,951 வெளிநாட்டினர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். 

இதில் 4,110 இந்தோனேசியர்கள்,  637 தாய்லாந்தினர், 391 மியான்மரிகள், 380 பாகிஸ்தானியர்கள், 279 வங்கதேசிகள், 73 சீனர்கள், 26 இந்தியர்கள், 11 இலங்கையர்கள் மற்றும் மேலும் 44 வெளிநாட்டினர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். 

“ஜனவரி 1 முதல் ஜூலை 2 வரையிலான காலக்கட்டத்தில் குடியேற்றத்துறை எடுத்த 4,301 நடவடிக்கைகள் மூலம் 68,033 வெளிநாட்டினரை பரிசோதித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக பதிவுச் செய்யாத 17, 473 குடியேறிகள் மீதும் அவர்களை (சட்டவிரோதமாக) வேலைக்கு அமர்த்திய 250 

நிறுவனத்தினர்/ முதலாளிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என மலேசிய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 2016 முதல் 2019 வரை மலேசிய குடியேற்றத்துறை நடத்திய 59,946 தேடுதல் நடவடிக்கைகள் மூலம் 191, 632 பதிவுச்செய்யாத குடியேறிகளும் 5,484 நிறுவனத்தினரும்/ முதலாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என மலேசிய உள்துறை குறிப்பிட்டுள்ளது. 

No comments