நம்பினால் நம்புங்கள்:ஜநா அறிவிப்பிற்கு கூட்டமைப்பே காரணமாம்?


சர்வதேசம் தமிழ் மக்களின் பக்கம் ஒன்றிணைந்து நிற்க முக்கிய காரணம் தமிழ் தேசியக் கூட்டடமைப்பு சர்வதேசத்தினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு சாணக்கியமாக காய் நகர்த்தியமையே. ஆகவே இந்த முயற்சியின் தொடர் வெற்றியைப் பெற்றுக்கொள்ள எதிர்காலத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்த கோரியிருக்கிறார் ரெலோவின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் 

யாழ். ஊடக அமையத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவித்திருந்தார். அதற்கு மாற்றீடாக உள்ளகப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாகக் கூறியிருந்தார். எனினும் அந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக ஐ.நா. ஆணையாளர் நிராகரித்துளளார். இது தமிழ் மக்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.

இலங்கை அரசாங்கம் தாங்கள் நினைத்தது போல 30-1 தீர்மானத்தில் இருந்து வெளியே வந்துவிடலாம் எனக் கனவு கண்டதையும் அறிக்கைகள் வெளியிட்டதையும் அறிந்திருந்தோம். அதற்கு மனித உரிமை ஆணையாளர் எதிர்ப்பினை வெளியிட்டதன் பின்னர் குறிப்பாக உள்ளக பொறிமுறையான உள்ளக விசாரணைக்கு எதிர்ப்பினை வெளியிட்டதன் பின்னர் வெளிநாட்டு, ஐ.நா. பிரதிநிதிகளும், சர்வதேச மன்னிப்புச் சபையும் இலங்கையின் விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.

நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கின்ற முக்கிய கோரிக்கை என்னவென்றால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு முன் நிறுத்த வேண்டும். சர்வதேசத்தின் முழுமையான மேற்பார்வையுடன் கூடிய ஓர் விசாரணை இலங்கை மீது நடத்தப்பட வேண்டும்.
இதேவேளை, கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் தங்களின் அரசியல் பலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியமையினால்தான் இன்று இலங்கை அரசாங்கம் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் காலத்திலும் தமிழ் மக்கள் உறுதியுடன் ஒற்றுமையான பலத்தினை வெளிப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் நாம் இதுவரை காலம் சர்வதேச அரங்கில் நகர்த்திய விடயங்களை அறுவடை செய்ய முடியும். ஆகவே எம்மீது விமர்சித்து எள்ளி நகையாடிய பலருக்கு தக்க பதிலடியாகவே ஐ.நா. முடிவுகள் வந்துள்ளன.

சர்வதேசம் தமிழ் மக்களின் பக்கம் ஒன்றிணைந்து நிற்க முக்கிய காரணம் தமிழ் தேசியக் கூட்டடமைப்பு சர்வதேசத்தினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு சாணக்கியமாக காய் நகர்த்தியமையே. ஆகவே இந்த முயற்சியின் தொடர் வெற்றியைப் பெற்றுக்கொள்ள எதிர்காலத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துங்கள். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை மீது இந்தப் பிரேரணையை கொண்டு வருவதற்கான ஆரம்பக்கட்ட விசாரணைகள் முடிவடைந்திருக்கின்றன.

அதன் பிரகாரம் அதற்கு முன்னாள் வைக்கப்பட்டுள்ள சாட்சிகளின் அடிப்படையில் இந்தப் பிரேரணை உருவாக்கப்பட்டு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. ஆனால் யுத்தக் குற்றவியல் சம்பந்தமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறக்கப்பட்டிருக்கின்றது. யுத்தக் குற்றவியல் சம்பந்தமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாகவே உள்ளது  என்றார்.

No comments