வலி.வடக்கு காணி:கடற்படை தளபதி-ஆளுநர் சந்திப்பு!


வலி.வடக்கில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வடக்கு ஆளுநர் நேரில் விஜயம் செய்து பார்வையிட்டுள்ள நிலையில் வடமாகாணத்தின் புதிய கடற்படை கட்டளைத் தளபதி அவசர அவசரமாக ஆளுநரை சந்தித்துள்ளார்.அண்மையில் வடமாகாணத்தின் புதிய கடற்படை கட்டளைத் தளபதி நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் கபில சமரவீர ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது ஆளுநர்; கடற்படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை காங்கேசன்துறை பிரதேசத்தில் கடற்படையினரின் வசமுள்ள நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு சொந்தமான புனித பூமி மற்றும் மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்தும் புதிய கடற்படை கட்டளை தளபதியுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஆளுநர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், வடமாகாணத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் கடற்படையினருக்குமிடையில் சுமூகமான நிலைமைகளை கட்டியெழுப்ப மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர்; இதன்போது கோரிக்கை விடுத்தார் என தெரியவருகின்றது.

இதனிடையே கடற்படையினரின் வசமுள்ள நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு சொந்தமான புனித பூமி மற்றும் மக்களின் காணிகளென பெரும்பகுதியை நிரந்தரமாக கடற்படை சுவீகரிக்க முற்பட்டுள்ளமை தெரிந்ததே.

No comments