மீண்டும் மீண்டும் குடைச்சல் கொடுக்கின்றது காவல்துறை!



முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று (26) வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்ற உள்ளூர் மக்களுக்கு பொலிஸார் மற்றும் அங்கு அடாத்தாக விவாகரை அமைத்துள்ள பிக்குவும் அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பல நூறாண்டுகளாக பழைய செம்மலை கிராம மக்களால் வழிபட்டு வரப்பட்டது. போருக்குப் பின்னர் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் குடியேறி குருகந்த ரஜமகா விகாரை எனும் பெயரில் விகாரை ஒன்றை அமைத்து அங்கு பெரியளவிலான புத்தர் சிலை ஒன்றையும் வைத்துள்ளார்.

பிக்குவின் அத்துமீறலையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்தப் பகுதியில் இரு தரப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இந்த விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதுதொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று இம்மாதம் 6ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்பட்டடது .



“இரண்டு தரப்பும் அந்தப் பகுதியில் உள்ள ஆலயங்களில் தடையின்றி சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்ளலாம். நிராவடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்குச் செல்பவர்களுக்குப் பௌத்த பிக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. இரண்டு தரப்பும் இந்த ஆலயங்களில் அபிவிருத்தி வேலைகளைச் செய்வதாக இருந்தால் உள்ளூர் திணைக்களங்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உரிய அனுமதிகளைப் பெற்று மேற்கொள்ளவேண்டும்.



ஏற்கனவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த பெயர்ப் பலகையை நீக்கி பௌத்த பிக்கு கணதேவி தேவாலயம் எனப் பெயர்ப் பலகை நட்டியிருந்தார்.

அதனை மாற்றி மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் என எழுதி மன்றுக்கு பொலிசாரை நீதிமன்று அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். இந்த உத்தரவை மீறினால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள்” என்று முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



இந்த நிலையில் இன்றையதினம் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தைச் சேர்ந்த நிர்வாகத்தினரும் அடியவர்களும் உரிய உள்ளூர் திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகார சபை ,கரைதுறைபற்று பிரதேச சபை ஆகியவற்றினதும் அனுமதிகளுடன் நீதிமன்றின் தீர்ப்புக்கு உட்பட்டு பிள்ளையார் ஆலயத்தின் இருமருங்கிலும் “நீராவியடி பிள்ளையார் ஆலயம் ” எனும் பெயர்ப் பலகையை நாட்ட சென்றவளைப் பௌத்த பிக்குவும் விகாரைக்கு பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டனர் .

மேலும் உடனடியாக பௌத்த பிக்குவால் பொலிஸாருக்கும் ,சிறப்பு அதிரடிப் படையினருக்கும் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் பௌத்த பிக்குக்குச் சார்பாகச் செயற்பட்டு ஆலயத்தில் வழிபாட்டுக்காகவும் நீதிமன்றின் உத்தரவை மதித்து பெயர்ப்பலகை நாட்ட வந்த செம்மலை கிராம மக்களை நிலத்தில் அமர்த்தி அனைவரினது பெயர் அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றையும் பதிந்ததோடு மிக நீண்டநேரம் விசாரணைகளிலும் ஈடுபடுத்தினர்.

மேலும் பிள்ளையார் ஆலயத்துக்கு நேர் எதிராக உள்ள இராணுவ முகாமுக்கு அருகாக வீதியின் அருகில் புதிய காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு அங்கே ஆயுதம் தாங்கிய படையினர் 24 மணிநேரமும் காவலில் அமர்த்தப்பட்டுள்ளனர். பௌத்த மத கொடிகளும் வெசாக் கூடுகளும் வேண்டும் பிள்ளையார் ஆலயத்துக்குள்ளும் கட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது .

No comments